இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி – வாஷிங்டன் கடும் எதிர்ப்பு ; கிழக்கு கடற்கரையில் இராணுவப் பயிற்சியில் அமெரிக்க படையினர்

0
12
Article Top Ad

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று புதன்கிழமை (24.04.2024) காலை இலங்கை வந்தடைந்தார்.

இவருக்கு இலங்கை அரசாங்கம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளதுடன், பிரமாண்ட பாதுகாப்பையும் வழங்கியுள்ளது.

உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தைத் திறந்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பிரகாரம் இப்ராஹிம் ரைசி பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.

ஈரான் ஜனாதிபதி பயணித்த விசேட விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதுடன், அங்கிருந்து உமாஓயாவிற்கு சென்று உமாஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்துவைத்துள்ளார் இப்ராஹிம் ரைசி.

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஐந்து ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினருடான சந்திப்பின் பின்னர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இப்ராஹிம் ரைசி தாயகம் திரும்ப உள்ளார்.

இப்ராஹிம் ரைசியின் வருகைக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன், தமது கவலையையும் வெளிப்படுத்தியிருந்தது. அத்துடன், இஸ்ரேல் தூதகரமும் இவரது வருகைக்கு கடும் எதிர்ப்பை அரசாங்கத்திடம் வெளிப்படுத்தி இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், அமெரிக்க கடற்படையினருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையில் இராணுவ ஒத்திகையொன்று இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இன்று நடத்தப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இந்த இராணுவப் பயிற்சி இன்றும் இடம்பெற்றுள்ளது. அத்துடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி தொடர உள்ளது.

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்த சூழலில் அமெரிக்கா இந்த இராணுவ ஒத்திகைக்கு ஏற்பாடு செய்துள்ளமையானது இப்ராஹிம் ரைசியின் பயணத்துக்கான எதிர்ப்பாகவே அரசியல் ஆய்வாளர்களால் அவதானிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here