பொதுஜன பெரமுனவுக்குள் கடும் பிளவு:தடுமாறும் மகிந்த, பசில்

0
160
Article Top Ad

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னமும் முடிவுசெய்ய முடியாத சூழ்நிலைக்கு அக்கட்சி முகங்கொடுத்துள்ளதால் கட்சிக்குள் மூன்று குழுக்கள் உருவாகியுள்ளன.

ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று ஒரு தரப்பினரும், ரணிலோ அல்லது வேறு எவராக இருந்தாலும் பொதுஜன பெரமுனவின் சார்பில் அவர் களமிறக்கப்பட வேண்டுமென ஒரு தரப்பினரும், பொதுஜன பெரமனவின் உறுப்பினர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென மற்றுமொரு தரப்பினரும் இயங்கி வருகின்றனர்.

இவர்களை கட்டுப்படுத்த முடியாது கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் தடுமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, ”ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. நாட்டை மீட்டெடுத்த தலைவராக அவர் உள்ளார்.

பொதுஜன பெரமுனவில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களின் நிலைப்பாடும் அதுதான். ஆகவே, ரணிலை வேட்பாளராக நிறுத்தும் அனைத்து செயல்பாடுகளுக்கும் நான் முழுமையாக ஆதரவளிப்பேன்.

அதேபோன்று அவரை வேட்பாளராக நிறுத்த மறுத்தால் அக்கட்சியிலிருந்து வெளியேறி ரணிலை ஆதரிக்கவும் தயாராக உள்ளேன்.”என்றார்.