மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சி: விடுதலைப் புலி சந்தேகநபர்களுக்கு பிணை மறுப்பு

0
48
Article Top Ad

2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவவில் அப்போதைய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சித்த இரண்டு விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித்த நேற்று (28) நிராகரித்துள்ளார்.

சந்தேக நபர்களான “கோஸ்தர்” அல்லது “மோரிஸ்” என அழைக்கப்படும் செல்வராசா கிருபாகரன் மற்றும் “தனுஷ்” என அழைக்கப்படும் தம்பையா பிரகாஷ் ஆகியோர் சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் சட்ட பிரதிநிதிகளான சுரங்க பண்டார மற்றும் அசித்த விபுலநாயக்க ஆகியோர் பிணை கோரியிருந்தனர்.

எனினும், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பிணைக் கோரிக்கையை கடுமையாக எதிர்த்திருந்தார்.

சந்தேகநபர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், வழக்கை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உறுதி செய்த நீதிபதி, 2025 ஏப்ரல் 28, 29 மற்றும் 30 திகதிகளில் சாட்சியங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டார்.

அப்போது அமைச்சராக இருந்த சிறிசேனவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதாக இரண்டு சந்தேகநபர்கள் மீதும் சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், ஐவர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.