முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் அகதிகளுடன் கரையொதுங்கிய படகு

0
141
Article Top Ad

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டுப் படகு ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது.

அந்தப் படகில் 102 மியன்மார் நாட்டுப் பிரஜைகள் உள்ளனர் எனவும், இதில் 35 பேரளவில் சிறுவர்கள் எனவும், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியவர்களும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த இடத்துக்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், படகில் இருக்கும் அகதிகளை அந்தப் பகுதி மீனவர் சங்கத்தினருடன் இணைந்து படகில் சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டன.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர் ஆகியோரும் கரையொதுங்கிய அகதிகளின் நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டனர்.

இவர்களைத் திருகோணமலையில் இருந்து கடற்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.