பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் கைதான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளை வரை (11) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கைதிகள் தொடர்பான விபரப் பட்டியலை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று இவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
துஷார உபுல்தெனிய சார்பில் பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், விசாரணை நடைபெற்று வருவதால் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
துஷார உபுல்தெனியவை பணிநீக்கம் செய்ய நேற்று அமைச்சரவை தீர்மானித்தது. அதன் பின்னரே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரும் கடந்த 8ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.