அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வந்தனர்..
முக்கியமாக டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் வரிக்குறைப்பு மசோதாவை மஸ்க் விமர்சித்தார். செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா முட்டாள்த்தனமானது என்று மஸ்க் தெரிவித்தார். .
இதையும் படியுங்கள்: சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டோம் – இந்தியர்களை எச்சரித்த அமெரிக்கா
தன்னை விமர்சித்த மஸ்க்குக்கு எதிராக அவரது நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த டிரம்ப், “எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது” என்று தெரிவித்தார்.
டிரம்ப் – எலான் மஸ்க் மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், ” கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து எனது சில பதிவுகள் அளவு மீறி சென்றுவிட்டன. அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.