இலங்கையின் மருத்துவ மாஃபியா: சுகாதாரத் துறையில் அதிகரிக்கும் நெருக்கடி

0
11
Article Top Ad

இலங்கையின் பொது சுகாதார கட்டமைப்பு, சமூக நலத்துறையின் அடிப்படையாக கொண்ட பெருமைக்குரிய அமைப்பாக இருந்தாலும், “மருத்துவ மாஃபியா” என அழைக்கப்படும் மருத்துவத்துறை சார்ந்த மோசடிகள், அதனால் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடிகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக அதன்மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளது. பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் மகேஷி சுரசிங்கே விஜேரத்ன, ஒரு மருத்துவமனை நிர்வாகி மற்றும் ஒரு பொதுமகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணியாற்றி வருபவர்கள்.

இந்த மூவரும், மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ கொள்முதலை தவிர்க்கும் வகையில், அங்கிருந்து ஒப்புதல் பெறாத தனியார் வழிகளின் மூலம் அவசியமான அறுவை சிகிச்சை உபகரணங்களை மிக உயர்ந்த விலையில் விற்பனை செய்வதற்கான முறையை திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் ரூ. 17,500க்குக் கீழ் கிடைக்கும் EVD மற்றும் வி.பி. ஷன்ட் போன்ற உபகரணங்கள், அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட நபர்களுக்கு ரூ. 250,000 வரை, அதாவது சந்தை மதிப்பை விட 10 மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் விளைவாக 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் கிடைக்கும் மருத்துவ உபகரண பொருட்கள் மோசமானவை என கூறப்பட்டு, அல்லது கையிருப்பில் இல்லை என தெரிவிக்கப்பட்டு, இந்த உபகரணங்களை அவர்கள் வாங்கும் நிலைக்கு தள்ளியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பலர், தற்போது தாமாகவே முன்வந்து சமூக ஊடகங்களில் இதனைத் தெரிவித்துள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவும், தற்போது பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்து வருகின்றது.

கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள்

இந்தச் சம்பவம் புதிதல்ல. மருத்துவ கொள்முதல் செயன்முறையில் வேரூன்றிய ஊழல் குறித்து சுகாதாரத் துறையினரும் நோயாளர் ஆதரவு குழுக்களும் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்,

அதிகாரிகள், பொருட்களின் இருப்பினை குறைவாக காட்டும் வகையில் கணக்குகளை மாற்றுவதன் மூலம் போலியான பற்றாக்குறையை உருவாக்கி, நோயாளிகளை அதிக விலையில் மருத்துவப் பொருட்கள் வாங்கும் நிலைக்கு தள்ளுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுவது இன்று நேற்றல்ல.

இலங்கை மருந்துத்துறை மற்றும் அதை கட்டுப்படுத்தும் அமைப்புகளும் இது தொடர்பாக மௌனம் காப்பது ஏன் என புரியவில்லை. உள்ளூர் மற்றும் உலகளாவிய நிறுவனங்கள், கொள்முதல் ஒப்பந்தங்களை தாமதப்படுத்தி, விதிமுறைகளை தவிர்த்து அதிக லாபம் பெற முயற்சிக்கும் இந்த மோசடியை வெளிப்படுத்துவோர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகினர், கொலையும் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த மருத்துவ மாஃபியாவின் பாரதூரம் எப்படிப்பட்டதென அறிந்துகொள்ளலாம்.

தொழில்முறை முறைகேடுகள்

நிதி முறைகேடுகளுக்கு அப்பால், இந்த ஊழல்கள் மருத்துவத் தொழிலின் நெறிமுறைக் கடமைகளை பாரதூரமாக மீறுவதாகும். நோயாளி பராமரிப்பை விட தனிப்பட்ட ஆதாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், சம்பந்தப்பட்டவர்கள், தாம் மருத்துவராக கடமையேற்கும் போது கூறும் உறுதிமொழியான ஹிப்போகிரட்டீஸ் சத்தியத்தை மீறுகின்றனர். மற்றும் சுகாதார கட்டமைப்பில் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர்.

உடனடி நடவடிக்கை

இதை எதிர்கொள்ள, இலங்கை மருத்துவ சபை (SLMC) அவசர நெறிமுறை விசாரணைகள் நடத்தி குற்றம்சாட்டப்பட்டவர்களின் மருத்துவ உரிமைகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடுதல் அழுத்தத்தில் உள்ளது. இதனை செயற்படுத்துவது மட்டுமன்றி, அவர்கள் மோசடியாக பெற்றுக்கொண்ட பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்துமாறு பணிப்பது ஏனையோருக்கு படிப்பினையாக அமையும். அத்தோடு, வாழ்நாள் பணித்தடை விதிக்கப்பட வேண்டும்.

அதுமட்டுன்றி, கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் பணிகள் குறித்து சுயாதீன ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

உரிமம் மற்றும் கட்டுப்பாட்டு செயன்முறைகளில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதோடு, உலக சுகாதார அமைப்பு (WHO), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) போன்றோரின் சிறந்த நடைமுறைகளை கொண்டு கொள்முதல் முறைகளில் ஊழலைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை மருத்துவ சபை போன்ற தொழில்முறை அமைப்புகளின் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவர்களுடைய சொத்து மற்றும் கணக்கு விபரங்களை கண்காணிப்பதும் இன்றியமையாதது.

இலங்கையின் “மருத்துவ மாஃபியா” என்ற கட்டமைக்கப்பட்ட மோசடியானது, சுகாதாரத் துறையில் நிர்வாகம், மேற்பார்வை மற்றும் தொழில்முறை நெறிமுறைகள் ஆகியவற்றில் உள்ள ஆழமான கட்டமைப்பு பலவீனங்களின் அடையாளமாகும். சமீபத்திய கைதுகள் பொறுப்புக்கூறலின் ஒரு சிறிய வெளிப்படைத்தன்மை மாத்திரமே. காலம் காலமாக நீடிக்கும் இந்த கொடிய மருத்துவ மாஃபியாவை ஒழிக்க வேண்டுமாயின், அரசியலில் இதயசுத்தியுடன் செயற்படும் மற்றும் முதுகெலும்புடன் தீர்மானம் மேற்கொள்ளும் நிர்வாகத்தினால் மாத்திரமே அது சாத்தியமாகும்.

செய்தியாக்கம் – கே.கே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here