கடந்த சில வாரங்களில் மியான்மாரில் உள்ள சைபர் குற்ற மையங்களில் 11 இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிக சம்பளம் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்பு என நம்பவைத்து, மனித கடத்தல் வலையமைப்புகள் மூலம் இவர்கள் மியான்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். டுபாய் மற்றும் தாய்லாந்து வழியாக சுற்றுலா விசாக்களில் அனுப்பப்பட்ட இவர்களை, பின்னர் மியாவடி பகுதியில் உள்ள சைபர் குற்ற மையங்களில் கட்டாயமாகப் பணியில் அமர்த்தியுள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத இடம்பெயர்வு வழிகளைத் தவிர்க்கவும், அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை மட்டும் பயன்படுத்தவும் தேசிய மனித கடத்தல் எதிர்ப்பு பணிக்குழு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கைகளை, மியான்மார் மற்றும் தாய்லாந்து தூதரகங்களுடன் இணைந்து இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

