இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுக்க இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 17ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (27) அறிவித்துள்ளது.
இந்த மனுக்கள் இன்று பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வில் அழைக்கப்பட்டிருந்தன. வழக்கு தொடர்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பிறருக்கு இதுவரை அழைப்பாணை கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் தரப்பின் வழக்கறிஞர்கள் விரைவான விசாரணை திகதியை கோரியபோது, நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒக்டோபர் 17இல் விசாரணைக்கு நியமித்துள்ளது.
இந்த மனுக்களை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ளனர். அதில், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 31 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவில், 2022 ஆம் ஆண்டு இலங்கை அரசு இந்திய அரசுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இரண்டு அமைச்சரவை முடிவுகள் பொதுமக்கள் மற்றும் பாராளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படாமல் எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் இந்தியாவுக்கு சென்றடையும் அபாயம் இருப்பதாகவும், இது நாட்டின் இறையாண்மை, தேசிய பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையிலும், அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு முரணாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டிலேயே ஆட்பதிவு திணைக்களம் மூலம் முன்னெடுக்கப்பட்டு வந்த டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு மாற்றியமைக்கும் அரசாங்கத் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டி, அந்த ஒப்பந்தத்தையும் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளையும் ரத்துசெய்து அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

