வரலாற்று தடயமாக மாறப்போகும் செம்மணி

0
319
Article Top Ad

Photo credit – Kumanan

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளின் இறுதி நாள் இன்றாகும். சித்துப்பாத்தி மனித புதைகுழியை அகழ்வதற்காக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 45 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இதுவரை சித்துப்பாத்தி மனித புதைக் குழியில் இருந்து 240 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 239 என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த என்புத்தொகுதிகள் காணப்பட்ட விதம், பல்வேறு அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, ஆடைகள் அற்ற நிலையில் மீட்கப்பட்டமை, சிறு குழந்தைகள் என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டமை மற்றும் தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டமை என்பன, சட்டத்திற்குப் புறம்பான கொலைகளின் விளைவாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

குறிப்பாக நேற்றைய தினம், அமர்ந்த நிலையில் ஒரு என்புத்தொகுதி மீட்கப்பட்டது. இந்த என்புக்கூடு தொடர்பில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின், இந்து நாகரிகத் துறை சிரேஷ்ட்ட விரிவுரையாளர் எஸ்.ரமணராஜா, புதைகுழிப் பகுதிக்கு அழைக்கப்பட்டு, அது தொடர்பான அவரது அவதானிப்புகள், விளக்கங்கள் கோரப்பட்டன. அவர் தனது அவதானிப்பின்படி, இந்த மனித என்புத் தொகுதி இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், என்புக்கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்புக்கூடு இல்லை எனவும் தெரிவித்தார்.

அதையடுத்து அது தொடர்பான தெளிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மேலதிக நீதிவான் செ.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த போதும், மேலும் என்புக் கூடுகள் காணப்பட கூடும் என நீதிமன்றத்திற்கு ஏற்கனவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அகழ்வுக்காக எட்டு வாரங்கள், கால அவகாசம் தேவைப்படுவதாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா அறிக்கையிட்டுள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள், செப்டம்பர் 18ஆம் திகதி நடைபெறும் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் தீர்மானிக்கப்படும். அன்றைய தினம், இடைக்கால நிபுணர் அறிக்கையும், செலவு விபரமும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

செம்மணி வரலாறு

செம்மணி என்பது 1990 களின் நடுப்பகுதியில் இலங்கை உள்நாட்டுப் போரின் போது, ​​குறிப்பாக யாழ்ப்பாண தீபகற்பத்தில் இராணுவ நடவடிக்கைகளின் போது, பலியான நூற்றுக்கணக்கான பொதுமக்களின் எச்சங்களைக் கொண்ட வெகுஜன புதைகுழிகளின் இருப்பிடமாகும். 1995-1996 ஆம் ஆண்டளவில் முன்னெடுக்கப்பட்ட ஒபரேஷன் ரிவிரெசவின் போது வலுக்கட்டாயமாக காணாமல் போன அல்லது இராணுவப் படைகளால் கொல்லப்பட்ட 300 முதல் 400 தமிழர்களின் உடல்கள் அங்குள்ள வெகுஜன புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ 1998இல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்ததைத் தொடர்ந்து செம்மணி சர்வதேச கவனத்தைப் பெற்றது.

1999 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அகழ்வின்போது 15 என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டன. அவற்றில் சில அந்தக் காலத்திலிருந்து காணாமல் போனவர்களாக அடையாளம் காணப்பட்டன.அப்போதிருந்து, இந்த இடம் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் தீர்க்கப்படாத போர்க்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அடையாளமாக இருந்து வருகிறது.

தற்போதைய நிலை

நீண்ட இடைவேளையின் பின்னர், கடந்த பெப்ரவரி மாதம் செம்மணி-சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு அருகில் கட்டுமானப் பணிகளின் போது எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது நீதித்துறை அதிகாரிகள், அரசு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் மேற்பார்வையில் மீண்டும் பெரிய அளவிலான அகழ்வினை முன்னெடுக்க வழிவகுத்தது.

இன்றுவரை என்புத்தொகுதிகளுடன், குழந்தைகளின் பாடசாலைப் பை, பொம்மைகள், கண்ணாடி வளையல்கள், காதணிகள் மற்றும் துணி துண்டுகள் போன்ற தனிப்பட்ட பொருட்களும் கண்டெடுக்கபட்டன. இது தடயவியல் பரிசோதனை மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சிகளுக்கு உதவியது. நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தடயவியல் பகுப்பாய்விற்காக எச்சங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச நிபுணத்துவத்திற்கான அழைப்புகள் தொடர்ந்து நடைபெறும் அகழ்வாராய்ச்சி முயற்சிகள் இருந்தபோதிலும், தமிழ் சமூகமும் மனித உரிமைக் குழுக்களும் விசாரணையின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன.

உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் பதிவான நீதிக்கு புறம்பான கொலைகளுடன் தொடர்புடைய வெகுஜன புதைகுழிகளை கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகளை உறுதி செய்ய சர்வதேச தடயவியல் நிபுணத்துவத்திற்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன.

காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச மேற்பார்வை மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட விசாரணைகளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களைப் பாதித்த  கொடூரமான போர்க்கால அட்டூழியங்களின் சக்திவாய்ந்த நினைவூட்டலாக செம்மணி உள்ளது. ஒவ்வொரு எச்சங்களும் வலிந்து காணாமல் போதல், நீதிக்கு புறம்பான குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல் ஆகியவற்றின் கதையை பிரதிபலிக்கின்றன. இந்த அகழ்வுப் பணியானது, என்புத்தொகுதி ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமல்ல, ஆற்றுப்படுத்தல், பொறுப்புக்கூறல் மற்றும் வரலாற்றுப் பதிவுக்கும் முக்கியமானது.