பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 கானா நாட்டவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த வழக்கு, தங்கம் விற்பனை என்ற போர்வையில் இடம்பெற்ற பெரிய அளவிலான பண மோசடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கானா தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபர்கள் 2023 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவிடம் தங்கம் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின் பேரில், ஹிஸ்புல்லா அவர்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளார். ஆனால், பணம் பெற்ற பிறகு சந்தேகநபர்கள் அவருடன் உள்ள அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டதாக வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு ஊடகங்களின் தகவலின்படி, சந்தேகநபர்கள் 50 கிலோகிராம் தங்கம் விற்பனை செய்ய இணங்கியிருந்ததுடன், அதன் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றும் கையெழுத்திடப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி குறித்த 11 நபர்களையும் கானா கைது செய்தது.
அவர்களிடமிருந்து தங்கம் போன்ற மஞ்சள் நிற உலோகங்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவற்றின் உண்மைத் தன்மை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு வரும் நவம்பர் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மோசடி வழக்கு, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் வெளிநாட்டு மோசடி வலையமைப்புகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைக் காட்டும் முக்கிய எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.

