ரொனால்டோ 1,000 கோல் இலக்கு

0
20
Article Top Ad

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.

40 வயதாகும் ரொனால்டோ கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அல் அக்தூத் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை கோல் பெற்றார். இதன்மூலம் அவரது அல் நாசர் அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இந்த கோல்கள் மூலம் அவர் தனது நாட்டுக்காகவும் கழகங்களுக்காகவும் பெற்ற கோல்களின் எண்ணிக்கை 956 ஆக உயர்ந்துள்ளது.

சவூதி அரேபிய கழகமான அல் நாசரில் கடந்த 2022 ஆம் ஆண்டு இணைந்த ரொனால்டோ கடந்த ஜூலையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை நீடித்தார். இதன்மூலம் அவர் 42 வயது வரை அந்தக் கழகத்திற்கு ஆடவுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடந்த உலக கால்பந்து விருது விழாவில் சிறந்த மத்திய கிழக்கு வீரராக விருது வென்ற ரொனால்டோ கூறியதாவது, ‘தொடர்ந்து ஆடுவது கடினமாக இருந்தாலும் அதற்கான ஊக்கம் கிடைத்துள்ளது. ஆர்வம் அதிகமாக இருப்பதோடு தொடர்ந்து ஆட விரும்புகிறேன்.

எனது இலக்கு என்ன என்பது உங்களுக்கு தெரியும். நான் கிண்ணங்களையும் இலக்கங்களையும் (1,000 கோல்கள்) எட்ட விரும்புகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். காயங்கள் ஏற்டாவிட்டால், அந்த இலக்கத்தை நான் நிச்சயம் அடைவேன்’ என்றார்.

ரொனால்டோ போர்த்துக்கல் (143) மற்றும் ரியல் மெட்ரிட் (450) அணிகளுக்காக அதிக கோல்களை பெற்றவராக சாதனை படைத்திருப்பதோடு நான்கு கழகங்களுக்காக (மான்செஸ்டர் யுனைடட், ரியல் மெட்ரிட், ஜூவான்டஸ் மற்றும் அல் நாசர்) 100 இற்கு மேல் கோல்களை பெற்ற ஒரே வீரராகவும் உள்ளார்.