இந்திய பட்ஜெட் 2026-27: இலங்கைக்கான நிதி உதவி 400 கோடி ரூபாயாக உயர்வு; உற்பத்தித் துறைக்கு முக்கியத்துவம்

0
102
Article Top Ad

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டத்தில், அண்டை நாடுகளுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு 400 கோடி இந்திய ரூபாய்களை கடனாகவும் மானியமாகவும் வழங்க முன்மொழிந்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய இலங்கையின் மீட்சிப் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டை விட இந்த நிதி ஒதுக்கீடு சுமார் ஒரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

“வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற இலக்கை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில், இந்தியாவின் உற்பத்தித் துறையை வலுப்படுத்த பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள உற்பத்தித் துறையின் பங்களிப்பை 25 சதவீதமாக உயர்த்துவதே அரசின் நோக்கம் என நிதியமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் ஆண்டுதோறும் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழையும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

அண்டை நாடுகளுக்கான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சில முக்கிய மாற்றங்களை இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது. பங்களாதேஷுக்கான நிதியுதவி பாதியாகக் குறைக்கப்பட்டு, 60 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய ராஜதந்திர சூழல் இதற்கு காரணமாகக் கருதப்படுகிறது. அதேபோல், அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல் மற்றும் உலகளாவிய அழுத்தங்கள் காரணமாக, ஈரானின் சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இம்முறை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

பூட்டானுக்கு அதிகபட்சமாக 2,280 கோடி ரூபாயும், நேபாளத்திற்கு 80 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாலத்தீவுக்கான நிதி 8 சதவீதம் குறைக்கப்பட்டு 550 கோடி ரூபாயாக உள்ளது. இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீத வளர்ச்சியைக் காணும் என்றும், பணவீக்கம் 2 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாட்டின் கடன்-ஜிடிபி விகிதத்தை 55.6 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவை மேலும் வலுப்படுத்த இந்த பட்ஜெட் வழிவகுத்துள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள மேலதிக நிதி உதவி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் முக்கிய பெறுபேறு ஆகும்.