தென்கொரியாவில் சாம்சங் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சம்பள உயர்வு, போனஸ் கொடுப்பனவு கோரி 18 நாள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் சுமார் 40,000 ஊழியர்கள் கலந்துகொண்டிருப்பதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சாம்சங் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக பெரும் ,லாபத்தை அடைந்து வருகிறது.
இந்நிலையில், இலாபத்துக்காக உழைத்த தமக்கு உரிய போனஸ், சம்பள உயர்வை ஊழியர்கள் நிறுவனத்திடம் கோரியும் வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் வரையிலான இந்த காலாண்டில் மட்டும் சுமார் 57.2 ட்ரில்லியன் வோன் வருவாயை நிறுவனம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
“ஊதியம் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் போனஸ்களுக்கான உச்சவரம்பை நீக்குங்கள்” என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊழியர்கள் கோரிய 7 சதவீத சம்பள உயர்வு மற்றும் இலாபத்தில் 15 சதவீத போனஸை வழங்க சாம்சங் நிறுவனம் மறுத்துள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தால், பாரியதொரு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் ஊழியர்கள் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் சோய் சியுங் ஹோ எச்சரித்துள்ளார்.

