ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டிருந்த காலக்கெடு மே முதலாம் திகதியான நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்கச் சட்டமான போர் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதியால் 60 நாட்களுக்கு மேல் இராணுவ நடவடிக்கையைத் தொடர முடியாது.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து 60 நாட்கள் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி, டிரம்பிற்கு தற்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லை என்றும், இது அவரை மூன்று சாத்தியமான வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
அந்த வகையில், ஈரானுடன் ஒரு அமைதி ஒப்பந்தம் செய்துகொள்வதே முதல் வழியாகும், அதன் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நிறுத்தி, கடல் முற்றுகையை நீக்கினால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதாக ஈரான் ஒரு நிபந்தனைக்குட்பட்ட சலுகையை முன்வைத்துள்ளது.
எனினும், இந்த சாத்தியக்கூறு பலவீனமானதாகக் கருதப்படுகிறது.
இரண்டாவது வழி, இராணுவ நடவடிக்கைக்கான அங்கீகாரத்தை காங்கிரஸிடம் கோருவதாகும், இதற்கு எளிய பெரும்பான்மை தேவை.
இந்த நிலையில், போரைத் தொடர முடியும் என்பதுடன் தரைவழி நடவடிக்கை உட்பட மேலதிக நடவடிக்கைகளும் சாத்தியமாகும். எனினும் இந்த சாத்தியக்கூறு நடுத்தரமானது என விவரிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது மற்றும் அதிக சாத்தியமான சூழ்நிலை என்னவென்றால், காலக்கெடு முடிந்த பிறகும் ஜனாதிபதி டிரம்ப் அதைப் புறக்கணித்துப் போரைத் தொடர்வதுதான்.
இது ஒருவித சட்ட மற்றும் அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்து, வெள்ளை மாளிகைக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தக்கூடும்.
இந்நிலையில், டிரம்ப் ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அரசியல் அல்லது சட்டரீதியான அபாயங்களைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எந்த வழியும் தெளிவான வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் ஏன் முடங்கியுள்ளது?
பல முக்கிய அம்சங்களில் உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சாத்தியமான ஒப்பந்தம் இன்னும் முடங்கியுள்ளது.
அதேவேளையில், இரு நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது உலகத்தின் கவனம் குவிந்துள்ளது.
அறிக்கைகளின்படி, போர் நிறுத்தத்திற்கு ஈடாக ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் எந்தவொரு பெரிய சலுகைகளையும் வழங்காததால், அந்நாடு முன்வைத்த சமீபத்திய முன்மொழிவுகளுக்கு டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டம்
முக்கியமான சர்ச்சைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஈரானின் அணுசக்தித் திட்டம் ஆகும்.
இதில், ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.
ஆனால் அத்தகையத் தடைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று ஈரான் வாதிடுகிறது.
யுரேனியம் படிவுகள்
யுரேனிய இருப்பும் ஒரு முக்கியப் பிரச்சினையாகும். ஈரானிடம் உள்ள சுமார் 400 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட
யுரேனியத்தின் மீது அமெரிக்கா முழுமையானக் கட்டுப்பாட்டைக் கோருகிறது, ஆனால் ஈரான் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை
மறுபுறம், ஹார்முஸ் நீரிணையும் பதற்றத்தின் மையமாகக் காணப்படுகின்றது. அங்கு, அமெரிக்கக் கடற்படை முற்றுகையை நீக்கினால் மட்டுமே தடைகளை நீக்க முடியும் என்ற நிபந்தனையுடன் ஈரான் தடைகளைத் தொடர்ந்து விதித்துள்ளது.
அதேவேளையில், ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை முற்றுகை தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட சொத்துக்களை மீட்டெடுத்தல்
இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக, பொருளாதாரத் தடைகளை நீக்குமாறும், சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள முடக்கப்பட்டச் சொத்துக்களைத் திருப்பித் தருமாறும் ஈரான் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதங்களுக்கான இழப்பீடு
மேலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்காக ஈரான் ஏறத்தாழ 279 பில்லியன் டொலர் இழப்பீடு கோரியுள்ளது.
இது பேச்சுவார்த்தைகளில் மற்றொரு பெரும் தடையாக அமைந்துள்ளது.
ஈரானின் பிராந்திய செல்வாக்கு
பிராந்திய செல்வாக்கும் ஒரு சிக்கலான பிரச்சினையாகும்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் உள்ளிட்ட தனது கூட்டாளிகளுக்கான ஆதரவை ஈரான் குறைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா விரும்புகையில், ஈரான் இந்த நிலைப்பாட்டை மறுத்துள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த அடிப்படைக் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்காமல் ஒரு விரிவான உடன்பாட்டை எட்டுவது தற்போது கடினமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

