உலக அரசியலில் கடந்த சில மாதங்களாக பெரும் கவனத்தை ஈர்த்து வரும் விவகாரங்களில் ஒன்றாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் இடையிலான பாதுகாப்பு மற்றும் அரசியல் மோதல் மாறியுள்ளது.
ஒருகாலத்தில் நெருக்கமான நட்பு நாடுகளாக கருதப்பட்ட இந்த இரண்டு நாடுகளுக்கிடையே தற்போது உருவாகியிருக்கும் பதற்றம், வட அட்லாண்டிக் பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோ (NATO) அமைப்பின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
“ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படலாம்”, “அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை பரிசீலிக்கிறது”, “ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து விலக முயல்கிறது” போன்ற செய்திகள் உலக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புக் கூட்டணியாக உருவானது. இதன் அடிப்படை நோக்கம், சோவியத் ஒன்றியத்தின் விரிவாக்கத்தை தடுக்க மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.

இந்தக் கூட்டணியின் மிக முக்கியமான விதியாக Article 5 கருதப்படுகிறது. அதன்படி, “ஒரு உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதானத் தாக்குதலாகக் கருதப்படும்”. இந்தக் கொள்கை காரணமாகவே நேட்டோ உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணியாக வளர்ந்தது.
அமெரிக்கா இந்தக் கூட்டணியின் முக்கிய நிதி ஆதார சக்தியாக உள்ளது. இராணுவத் தொழிநுட்பம், பாதுகாப்பு நிதி, அணு ஆயுத திறன் மற்றும் உலகளாவிய இராணுவத் தளங்கள் ஆகிய அனைத்திலும் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.
ஸ்பெயின் 1982 ஆம் ஆண்டு நேட்டோவில் இணைந்தது. ஆரம்பத்தில் சில அரசியல் எதிர்ப்புகள் இருந்த போதிலும், பின்னர் அது ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பில் முக்கிய உறுப்பினராக மாறியது.
இந்த நிலையில் தான் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் இடையே உருவாகியுள்ள பாதுகாப்பு மற்றும் அரசியல் கருத்து மோதல், தற்போது நேட்டோ கூட்டணிக்குள் பாரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ அமைப்பில் முக்கிய உறுப்பினராக உள்ள ஸ்பெயின், பாதுகாப்புச் செலவின உயர்வு மற்றும் மத்திய கிழக்கு இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவுடன் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நேட்டோ நாடுகள் தங்களின் பாதுகாப்புச் செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை, நேட்டோவின் அனுமதி இன்றிய ஈரான் தொடர்பான இராணுவ நடவடிக்கைகள், அமெரிக்காவின் கடும் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
அத்துடன், நேட்டோ நாடுகள் தங்கள் GDP-இன் 5 சதவீதத்தை பாதுகாப்புக்காகச் செலவிட வேண்டும், அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் பாதுகாப்புச் சுமையை மற்ற நாடுகளும் பகிர வேண்டும், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கப் பாதுகாப்பின் கீழ் ‘இலவசப் பயணம்’ செய்யக்கூடாது போன்ற டிரம்பின் கருத்துகள் ஐரோப்பிய நாடுகளின் கௌரவத்துக்கும் பாதிப்பாக உள்ளதால் இவ்வாறு கருத்து மோதல்கள் வலுப்பெற்றுள்ளன.
பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) தலைமையிலான ஸ்பெயின் அரசு, அமெரிக்காவின் இந்தக் கோரிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. பொருளாதார அழுத்தங்கள், வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கானச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்புச் செலவை பெரிதும் உயர்த்துவது சாத்தியமற்றது என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் அரசியல் அமைப்பில் இடதுசாரி மற்றும் சமூகநலக் கொள்கைகளுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. கல்வி, சுகாதாரம், சமூக நலன் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்து ஸ்பெயினில் நீண்டகாலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக “அதிக இராணுவமயமாக்கல்” குறித்து மக்களிடையே கடும் எதிர்ப்புகள் உள்ளன.
நீண்டகாலமாக அமெரிக்கா – ஸ்பெயின் இடையில் இதுகுறித்து கருத்து மோதல்கள் இருந்துவந்தப் போதிலும், ஈரான் மீதான அமெரிக்காவின் தன்னிச்சயான தாக்குதல் இந்த மோதலை தீவிரப்படுத்தியதில் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவ முன்னெடுப்புகளை அதிகரித்தபோது, ஸ்பெயினில் அமைந்துள்ள அமெரிக்க – ஸ்பெயின் கூட்டு இராணுவத் தளங்களான Rota மற்றும் Morón தளங்களை முழுமையாகப் பயன்படுத்த அமெரிக்கா எதிர்பார்த்த போதிலும் அதற்கு ஸ்பெயின் மறுப்புத் தெரிவித்துவிட்டது.
இந்த நிலையிலேயே, ஸ்பெயினை நேட்டோவில் இருந்து இடைநிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், இது அதிகாரப்பூர்வ முடிவு அல்ல என்றும், நேட்டோ அமைப்பில் ஒரு உறுப்பு நாட்டை எளிதில் வெளியேற்றும் நடைமுறை இல்லை என்றும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் போர், ரஷ்ய அச்சுறுத்தல் மற்றும் அமெரிக்காவின் மாறிவரும் வெளிநாட்டுக் கொள்கைகள் காரணமாக, ஐரோப்பா தனது பாதுகாப்புத் தன்னிறைவைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.
‘‘அமெரிக்கா – ஸ்பெயின் கருத்து மோதல் ஒரு சாதாரண இருதரப்புப் பிரச்சினை அல்ல. மாறாக மேற்கத்திய கூட்டணிக்குள் உருவாகும் புதிய அரசியல் பிளவுகளின் அறிகுறியாகும்‘‘ என உலக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதுவரை ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான நேரடி அபாயம் இல்லாவிட்டாலும், இந்தப் பதற்றம் எதிர்காலத்தில் நேட்டோ கூட்டணியின் திசையை பாதிக்கக்கூடிய முக்கிய அரசியல் சவாலாகப் பார்க்கப்படுகிறது.

இந்த மோதல் போக்கின் எதிரொலியாக ஐரோப்பாவில் புதிய பாதுகாப்பு மற்றும் இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட வேண்டுமா என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
நேட்டோ கூட்டணி இன்னும் ஐரோப்பாவின் முக்கிய பாதுகாப்பு அமைப்பாக இருந்தாலும், தற்போதைய அரசியல் போக்கானது ஐரோப்பா தனது பாதுகாப்புத் தன்னிறைவை அதிகரிக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.
“ஐரோப்பாவுக்கு தனித்துவமான பாதுகாப்பு சுயாதீனம் அவசியம்” என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் என ஐரோப்பாவின் மூன்று முக்கிய நாடுகள் இந்த விடயத்தில் கைகோர்த்து உள்ளமையால் நிச்சயமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக்கான புதிய இராணுவக் கூட்டணி குறித்த பேச்சுகள் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
உலக அரசியல் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், ஐரோப்பாவில் உருவாகும் இந்த புதிய பாதுகாப்புச் சிந்தனை, எதிர்கால உலக அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

