
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைக் காணச் செல்ல, இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 2,300 க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து தடை உத்தரவு பெற்றுள்ள இந்த நபர்கள், தாங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க, எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தங்களது கடவுச்சீட்டுகளை பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூலை 19ஆம் திகதி உலகக்கோப்பை இறுதிப் போட்டி முடியும் வரை பொலிஸார் இந்த கடவுச்சீட்டுகளைத் தங்கள் வசம் வைத்திருப்பார்கள்.
நீதிமன்றத்தால் வழங்கப்படும் இந்தத் தடை உத்தரவுகள் 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியவை. இதனை மீறுபவர்களுக்கு வரம்பற்ற அபராதம் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வன்முறையில் ஈடுபடும் ஒரு சிறு கும்பல் இந்த உலகக்கோப்பையில் வரவேற்கப்பட மாட்டார்கள் என்றும், உண்மையான ரசிகர்கள் பாதுகாப்பாகப் போட்டிகளைக் கண்டு மகிழவே இந்த நடவடிக்கை என்றும் பொலிஸ்துறை அமைச்சர் சாரா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த உலகக்கோப்பைத் தொடருக்காக இங்கிலாந்திலிருந்து சுமார் 65,000 ரசிகர்கள் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஆன்லைன் வாயிலாகப் பரப்பப்படும் இனவெறி மற்றும் வெறுப்புப் பேச்சுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இங்கிலாந்து வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குப் பொலிஸார் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
கடந்த 2022 கட்டார் உலகக்கோப்பையில் இங்கிலாந்து ரசிகர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

