சர்வதேசத்துடன் நெருக்கமாக பணியாற்ற விரும்பும் அநுர அரசு: இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

0
7
Article Top Ad

”இனம், மதம், வர்க்கம் மற்றும் பிற வேறுபாடுகளின் அடிப்படையிலான இலங்கை பிளவுபட்டுள்ள சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பன்முகத்தன்மையை மதிக்கும் தேசத்தை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு தேவையான அரசியலமைப்பு, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

– இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியதுடன், தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

”அனைவரும் எதிர்பார்த்தப்படி வெளிப்படையான மற்றும் அமைதியான தேர்தல் செயல்முறையைப் பின்பற்றி, இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அரசியலமைப்பு நடைமுறைகளின்படி ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தார். நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14, 2024 அன்று இடம்பெற உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை, மூன்று அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை இயங்கி வருகிறது. வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றும் நான் மேலும் ஐந்து அமைச்சுக்களை கவனித்து வருகிறேன். உங்களில் பெரும்பாலானவர்களை என்னால் தனித்தனியாகச் சந்திக்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணம். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நெருங்கிய தொடர்பைத் தொடர விரும்புகிறேன்.

ஜனாதிபதியும் இராஜதந்திரிகளை சந்திப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் ஆரம்பத் திட்டங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே, புதிய அரசாங்கத்தின் முன்னோக்கிச் செயற்படுகளை முழுமையாக கவனிக்க முடியும். இருதரப்பு தொடர்பான விடயங்களில் அந்த கட்டத்தில் உங்கள் ஒவ்வொருவருடனும் விரிவான ஈடுபாடுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை மக்கள் புதிய நெறிமுறை அரசியல் கலாசாரத்தில் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு ஆணைக்கு வாக்களித்தனர்.

ஜனாதிபதி நாட்டிற்கு தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டது போல், இந்த மாற்றம் பல படிகளை உள்ளடக்கியது. பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்துவதும் வளர்ச்சியைத் தூண்டுவதும் மிக முக்கியமான ஒன்றாகும். அதே நேரத்தில் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து மக்களின் கஷ்டங்களை போக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், இலங்கைக்கு தங்கள் ஆதரவை வலியுறுத்தி வந்த ஐஎம்எப் குழுவுடன் நாங்கள் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மற்றும் சீர்திருத்தத் திட்டம் தொடர்பான அடுத்த கட்டத்தில் நாங்கள் குழுவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவோம்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறை முடிவடையும் தருவாயில் உள்ளது.

ஊழலை ஒழித்தல், பொதுச் சேவையில் செயல்திறன், சட்டத்தின் ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய அரசியல் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் ஜனாதிபதி அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். பொருளாதார வெற்றி இந்த துணை தூண்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இலஞ்சம் மற்றும் ஊழலைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற உறுதிமொழிகளுக்கு இணங்க, சில முக்கிய விடயங்களில் நாங்கள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு ஏற்கனவே ஊழல் மோசடிகள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here