சில அரச நிறுவனங்களின் செயற்பாடு குறித்து பிரஜைகள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்களை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
எந்த தேசமும் நிலைத்து நிற்க வலுவான அடித்தளம் தேவை. புத்தரின் தத்துவத்தின் மூலம் இலங்கை மக்கள் அத்தகைய வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளனர். கல்வியில் பின்னடைந்த சமுதாயத்தில் வலிமையான பிரஜைகளை எதிர்பார்க்க முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பௌத்தம் இந்நாட்டில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. விகாரைகளைப் பிரிவெனாக்களாக மாற்றுவதன் மூலம், இந்நாட்டு மக்களுக்கு ஆன்மீகத்தையும் அறிவையும் வழங்கும் சமூக நோக்கத்தை நிறைவேற்றுவதில் பௌத்தம் பெரும் பங்காற்றியது. இது ஒரு நாகரீக சமூக பொறிமுறையின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அதற்காக 2500 ஆண்டுகால வரலாற்றில் இந்நாட்டில் செயற்பட்ட தேரர்கள் அனைவருக்கும் நாம் நன்றியுடன் இருக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆனால் இப்போது அந்தச் சமூகப் பொறிமுறை வீழ்ச்சியடைந்து விட்டது. சில பொலிஸார் குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலையில் உள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் சட்டவிரோத கடவுச்சீட்டுகளை வழங்கும் நிலை தோன்றியுள்ளது. பாதாள உலகத் தலைவர்களுக்கு விமானப் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களத்தில் உள்ள சிலர் சட்டவிரோதமாக கைதிகளை விடுவித்துள்ளனர். போக்குவரத்துத் திணைக்களத்தில் உள்ள சில அதிகாரிகள் சட்டவிரோத செயல்களைச் செய்துள்ளனர். இந்த நிறுவனங்கள் குறித்து பிரஜைகள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. எனவே, பிரஜைகளின் பிரஜைப் பொறுப்பை உருவாக்க நெறிமுறை சார் திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை இந்தப் பௌத்த தத்துவத்தின் மூலம் பெறலாம் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
ஒரு நெறிமுறை சார்ந்த தேசமாக, இந்த அரச நிறுவனங்களின் பின்னடைவை மீண்டும் மீட்டெடுக்க செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த பணியை கைவிடாமல் நிறைவேற்ற, சாதாரண குடிமக்களின் ஆதரவும் அவசியம் என்றார். இந்த வீழ்ச்சியடைந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பௌதிக மற்றும் ஆன்மீக ரீதியாக மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு இந்த நாட்டை மாற்றும் பொறுப்பைக் கைவிடாமல் நிறைவேற்ற, சாதாரண மக்களும் ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.