ட்ரம்பின் இரண்டாம் பதவி காலத்தில் கனடாவில் வர்த்தகம், அரசியல், மக்கள் மனநிலையில் பாரிய மாற்றங்கள்

0
62
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்து கடந்த ஒரு ஆண்டில், கனடாவுடனான நீண்டகால உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ட்ரம்ப் நிர்வாகம் கனடாவின் உலோகம், மரம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு சுங்க வரிகளை விதித்ததுடன், மேலும் வரிகள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. கனடாவை “51-வது மாநிலம்” என அவர் குறிப்பிட்டது, கனடா மக்களிடையே கவலையும், அதே நேரத்தில் வலுவான தேசிய உணர்வையும் தூண்டியுள்ளது.

அமெரிக்க பொருட்கள் மீதான புறக்கணிப்பு கனடாவில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மாகாணங்களின் பெரும்பாலான மதுபான கடைகளில் அமெரிக்க மதுபானங்கள் அகற்றப்பட்டன. இதன் விளைவாக, 2025 இறுதி காலாண்டில் அமெரிக்க மதுபான ஏற்றுமதி 9% குறைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் அமெரிக்க மதுபான இறக்குமதி மதிப்பு 2024இல் 63.1 பில்லியன் டொலரிலிருந்து 2025இல் 9.5 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும், அமெரிக்காவுக்குச் செல்லும் கனடியர்களின் பயணங்களும் 25%-க்கும் அதிகமாகக் குறைந்துள்ளன. இதனால் அமெரிக்க சுற்றுலா துறை 2025இல் 5.7 பில்லியன் டொலர் இழப்பை எதிர்நோக்குகிறது. அதேசமயம், கனடாவின் உள்நாட்டு சுற்றுலா வருவாய் உயர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், கனடாவின் அரசியலும் திருப்பம் கண்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விலகிய பின்னர், மார்க் கார்னி தலைமையில் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ட்ரம்பை எதிர்கொண்டு கனடாவின் பொருளாதாரமும் இறையாண்மையும் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை, வாக்காளர்களை லிபரல்களிடம் மீண்டும் திரும்ப வைத்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், கனடா சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. சீனாவுடன் சுங்க வரிகளை குறைக்கும் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவுடனான உறவுகளை மீளமைக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மொத்தத்தில், ட்ரம்பின் இரண்டாம் பதவி காலம், கனடாவின் வர்த்தகம், வெளிநாட்டு கொள்கை மற்றும் மக்கள் மனநிலையிலேயே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.