வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டில் கலீல் அகமது பந்து வீசிய போது வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இடையில் வெளியேறினார்.
இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்குத் தசைநார் கிழிவுஇருப்பது உறுதியானது.
இதிலிருந்து அவர் மீண்டு வரக் குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கலீல் அகமது, காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.
இந்த பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் கலீல் அகமது இடம் பெற்றிருந்தார். சென்னை அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக அவர் செயற்பட்டிருந்தார்.
இந்நிலையில், கலீல் அகமதுவுக்குப் பதிலாக மாற்று வீரராக யாரை சென்னை அணி ஒப்பந்தம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

