“திமுக ஆட்சிக்கு எதிராக பெரும் கொந்தளிப்பில் இருந்த மக்கள் திமுக ஆட்சியை அகற்றுவதற்காக திரண்டு வந்து வாக்களித்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதன் விளைவுதான் வரலாறு காணாத வகையில் 85.12% வாக்குகள் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவாகி உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வரலாற்றில் இந்த அளவு வாக்குகள் பதிவாகியிருப்பது இதுதான் முதல் முறையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஜனநாயகத்தை மதிப்பவர்கள். அமைதிப்புரட்சி செய்பவர்கள். இப்போதும் அதைத்தான் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டன. சட்டம் – ஒழுங்கை பாதுகாத்தல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கட்டுப்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட ஓர் அரசின் அடிப்படைக் கடமைகள் எதையுமே திமுக அரசு செய்யவில்லை எனவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், கொந்தளித்துப் போன மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவதற்காக காத்திருந்தனர். அதனையே தற்போது செய்துள்ளனர். அதன் விளைவு தான் வரலாறு காணாத வகையில் 85.12% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

