தடைகள், இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் வெளியிடப்பட்டது புதிய சுகாதார வழிகாட்டி

0
329
Article Top Ad

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சுகாதார அமைச்சால் புதிய சுகாதார வழிகாட்டி இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவால் இந்தச் சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

12 தீர்மானங்களை உள்ளடக்கிப் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

அவையாவன:-

01. மாநாடுகள், செயலமர்வுகள், கூட்டங்கள், மதியநேர விருந்துபசாரங்களை நடத்துவதற்கு 2021.05.21ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நாட்டில் காணப்படுகின்ற கொரோனா நிலைமை குறித்து ஆராய்ந்து எதிர்கால அறிவிப்பு பிறப்பிக்கப்படும்.

02. பல்பொருள் அங்காடிகள், பிரமாண்ட விற்பனை நிலையங்கள், நிதி நிறுவனங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள் ஆகியன முழு அளவில் 25 வீத அளவுடன் செயற்பட வேண்டும்.

03. மூடிய இடங்கள் மற்றும் திறந்த இடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

04. மதத் தலங்களில் பொதுமக்கள் ஒன்று கூடக்கூடாது.

05. திரையரங்குகள், அரங்குகள், சிறுவர் பூங்காக்கள், நீச்சல் தடாகம், Pub, பார் (Bars), கசினோ (Casino), இரவு நேர களியாட்ட விடுதிகள், பந்தய நிலையங்கள் ஆகிய இடங்கள் மறு அறிவித்தல் வரைக்கும் மூடப்படுகின்றன.

06. ஹோட்டல்கள், வாடி வீடுகள், ஏனைய தங்குமிடங்களில் 50 வீதமானோர் மாத்திரமே இருக்க முடியும் என்பதுடன், இரவு 10 மணிக்குப் பின்னர் செயற்படக் கூடாது.

07. கானிவல், இசை நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

08. திறந்த வர்த்தக நிலையங்கள், சந்தை, பேக்கரி ஆகியன முழு அளவில் 25 வீதம் மாத்திரமே செயற்பட அனுமதி வழங்கப்படுகின்றது.

09. நீதிமன்றம், முழு அளவில் 25 வீதம் மாத்திரமே செயற்பட வேண்டும் என்பதுடன், மக்கள் வருகை தர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

10. சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

11. பாடசாலைகள், ஆரம்பப் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், மேலதிக வகுப்புக்கள் மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன.

12. 2021ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி முதல் மே மாதம் 20ஆம் திகதி வரை திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நாட்டில் காணப்படுகின்ற கொரோனா நிலைமை குறித்து ஆராய்ந்து எதிர்கால அறிவிப்பு பிறப்பிக்கப்படும்.