எவராலும் தடுக்கவே முடியாதபடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச்செய்தே தீருவோம்-சுமந்திரன் எம்.பி.உறுதி

0
289
Article Top Ad

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டதைத் தமிழ்த் தேசியகூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என அக்கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்தச் செயலானது வெறுமனே கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை; இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களையும் தகர்த்திருக்கின்றது எனவும் அவர் சீற்றத்துடன் கூறினார்.

மரணித்தவர்களின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சக் கட்டம். இராணுவமும் பொலிஸும் அந்த இடத்துக்கு வந்து பார்வையிட்ட பின்னர்தான் நினைவுத் தூபி உடைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது எனவும், அந்த நினைவுகளை எந்த உத்தரவும் மழுங்கடிக்கவும் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்வோம்; எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.