தலிபான்களிடமிருந்து ஆச்சரிய அறிவிப்பு :அனைவரும் மன்னிக்கப்படுவார்கள் என முதல் செய்தியாளர் சந்திப்பில் உறுதி

0
201
Article Top Ad

 

‘எங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். யாரும் நாட்டைவிட்டுப் போகவேண்டியதில்லை’ என்று தாலிபன்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு தாலிபன்கள் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமான செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கேமிராக்கள் முன்பாக தோன்றி பேசினார்.

’20 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு நாங்கள் நாட்டை விடுவித்துள்ளோம். வெளிநாட்டினரை வெளியே விரட்டியுள்ளோம்’.

‘நாடு முழுமைக்கும் பெருமிதமான தருணம் இது’ என்றார் அவர்.

‘ஆப்கானிஸ்தான் மோதல்கள் நிகழும் போர்க்களமாக நீடிக்காது என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்’ என்று வெற்றிக்குப் பிந்தைய தங்கள் முதல் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார் தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித்.

‘எங்களுக்கு எதிராகப் போராடிய அனைவரையும் நாங்கள் மன்னித்துவிட்டோம். பகைமைகள் முடிவுக்கு வந்துவிட்டன. வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ எங்களுக்கு எந்த எதிரிகளும் வேண்டாம்’ என்று குறிப்பிட்டார் சபியுல்லா.

‘நாடு முழுவதும் பாதுகாப்பு உள்ளது. யாரும் நாட்டைவிட்டு வெளியேறவேண்டியதில்லை’ என்றும் குறிப்பிட்டார் அவர்.

தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடத்தலும் கொலையும் நடப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது ‘யாரும் யாரையும் கடத்தமுடியாது. ஒவ்வொரு நாளும் நாங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்துகிறோம். பொது மன்னிப்பு வழங்கப்படுமே அல்லாது பகைமை இருக்காது’ என்று அவர் தெரிவித்தார்.

வேறொரு கேள்விக்குப் பதில் அளித்த அவர் ’20 ஆண்டுகளுக்கு முன்போ இப்போதோ எப்போதும் எங்கள் நாடு ஒரு முஸ்லிம் நாடு. ஆனால் அனுபவம், பக்குவம், பார்வை என்று வரும்போது இப்போதுள்ள எங்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எங்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நாங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கைகளிலும் வேறுபாடுகள் இருக்கும். இது ஒரு பரிணாம நடைமுறை’ என்று அவர் கூறினார்.

‘ நாங்கள் ஒரு அரசாங்கத்தை அமைக்க இருக்கிறோம். அதன் பிறகுதான் என்னவிதமான சட்டம் நாட்டுக்கு வழங்கப்படும் என்று தெரியும். அரசாங்கத்தை அமைத்தபிறகு அது பற்றி தெரிவிக்கப்படும்’ என்று அவர் கூறினார்.

நன்றி : பிபிசி உலக சேவை