கிளைவ் லொய்ட்டின் தலைமைத்துவ சாதனையை முறியடித்த வீராட் ஹோலி

0
228
Article Top Ad

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணி 151 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில். 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணித்தலைவர் வீராட் ஹோலி அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற தலைவர்கள் வரிசையில் 4வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் கிளைவ் லொய்ட் தனது வாழ்நாளில் 36 டெஸ்ற் வெற்றிகளுக்கு தலைமை தாங்கியிருந்தார் . தற்போது வீராட் ஹோலி 37 டெஸ்ற் வெற்றிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.

இதனைத் தவிர SENAஎனப்படும் South Africa தென் ஆபிரிக்கா, English இங்கிலாந்து, New Zealand நியுஸிலாந்து மற்றும் Australia அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற ஆசிய அணித்தலைவர் என்ற சாதனையையும் தனதாக்கியுள்ளார்.

அத்தோடு 1986 2014 ம் ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிக்கட்டின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்தில் வெற்றிகளைப் பெற்ற அணித்தலைவர்களான கபில் தேவ் எம்.எஸ் .தோனி ஆகியோர் வரிசையில் வீராட் ஹோலி இணைந்துகொண்டார்.

லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது இந்தியா அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக கே.எல். ராகுல் 129 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் எண்டர்சன் 5 விக்கெட்டுகளையும் ஒல்லி ரொபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொயின் அலி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 391 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ஜோ ரூட் 180 ஓட்டங்களையும் ஜோனி பேயர்ஸ்டொவ் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 27 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது இந்திய அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக ரஹானே 61 ஓட்டங்களையும் மொஹமட் ஷமி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும் ரொபின்சன் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து 272 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி 151 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ஜோ ரூட் 33 ஓட்டங்களையும் பட்லர் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 4 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியக் கிரிக்கெட் அணியின் கே.எல். ராகுல் தெரிவுசெய்யப்பட்டார்.