வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு! – குவாட் அமைப்பிடம் கோரிக்கை

0
292
Article Top Ad

 

“ஐக்கிய நாடுகள் சபை வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளக்கிய குவாட் QUAD அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இது தொடர்பான கடிதம் ஏற்கனவே இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூன்று நாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்த கடிதம் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அனுப்பப்பட்ட அந்த கடிதத்திலே, 1987 ஆம் ஆண்டின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாகிய, நடைமுறையிலுள்ள மாகாண சபைகள் முறைமையானது இலங்கையால் கடந்த 3 வருடங்களாகக் கைவிடப்பட்டுள்ளது. இலங்கை அரசானது தேர்தலை நடாத்துவதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காமல், பதிலாக
சபைகளுக்குக் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அகற்றுவதிலேயே ஈடுபட்டுள்ளது.

இந்திய – இலங்கை ஒப்பந்தமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குரிய பிராந்தியத்தை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாகத் தெளிவாக அங்கீகரித்துள்ளது.

குறித்த உடன்படிக்கையின் மூலமாகக் கொண்டுவரப்பட்ட அரசமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை இலங்கையானது எப்போதுமே முழுமையாக அமுல்படுத்தவில்லை என்பதுடன் தற்போது அதனை மேலும் பலமிழக்கச் செய்வதிலேயே ஈடுபட்டுள்ளது.

இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை அடைவதற்கும் அதேசமயம் எமது பிராந்தியத்தில் சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் உதவுவதன் பொருட்டு தமிழ் மக்கள் உலகிலுள்ள அதிகாரம் மிகுந்த நாடுகளில் ஒன்றாகிய இந்தியாவிடம் அழைப்பு விடுக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான கடந்த கால வன்முறை வடிவங்கள் மீள இடம்பெறாமல் இருப்பதற்கு
உத்தரவாதம் அளிக்கவல்ல நிரந்தர அரசியல் தீர்வை ஜனநாயக ரீதியில் நிலைநாட்டுவதற்காகவும், அவர்களுக்கான ஈடுசெய் நீதியை வழங்குவதன் பொருட்டும் அவர்களை அடக்குமுறையிலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுவிப்பதன் பொருட்டும் இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மக்களுக்காக ஐ.நாவால் கண்காணிக்கப்படுகின்ற குவாட் நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா, யப்பான், ஐக்கிய அமெரிக்கா போன்றனவற்றால் நடத்தப்படுகின்றதுமான பொதுஜன வாக்கெடுப்பை ஒருங்கிணைப்பதற்காக உடனடியானதும் அவசரமானதுமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இந்தியாவிடம் கோருகின்றேன்” – என்றார்.
……