ஈக்குவடோர் சிறைச்சாலை மோதலில் 68 பேர் உயிரிழப்பு

0
136
Article Top Ad

ஈக்குவடோரின் குவாயாகீல் நகரிலுள்ள சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 68 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேளையில் இந்தக் கலகம் ஆரம்பமாகியதாக ஈக்குவடோர் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறைச்சாலையின் ஒரு பகுதியிலிருந்த கைதிகள், தமது எதிர்த்தரப்பு கைதிகள் இருந்த பகுதியை அடைவதற்காக துளையொன்றின் வழியாக ஊர்ந்து சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் மற்றைய கைதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கலகம் இடம்பெற்ற சிறைச்சாலைக் கட்டடத்திற்குள் சென்ற கலகத்தடுப்புப் பொலிஸார் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றை கண்டெடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதே சிறைச்சாலையில் கடந்த செப்டம்பர் மாதம், கைதிகளின் இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கலகத்தில் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் உயிரிழந்தனர்.

ஈக்குவடோர் வரலாற்றிலேயே மிகவும் மோசமான குழு மோதலாக இது அமைந்திருந்தது.

அதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலத்தில் ஈக்குவடோர் சிறைச்சாலைகளில் சுமார் 300 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.