கொரோனா வைரஸ் பரவலைத் தீவிரப்படுத்த எதிரணி முயற்சி! – அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்பில் எஸ்.பி. சீற்றம்

0
162
Article Top Ad

“ஐக்கிய மக்கள் சக்தியினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு கொரோனா வைரஸ் பரவலைத் தீவிரப்படுத்த முயற்சிக்கின்றார்கள்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலக நாடுகள், பாடசாலைகளை மூடியதால் பெரும்பாலான மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாத் தாக்கம் தொடர்பில் அரசு, சுகாதாரத் தரப்பினர், நாட்டு மக்கள் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடும் ஆலோசனைகளைக் கருத்தில்கொள்ளாமல் எதிர்த்தரப்பினர் தான்தோன்றித்தனமாகச்  செயற்படுகிறார்கள்.

கொரோனாவைக் கருத்தில்கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக உலகில் பெரும்பாலான நாடுகள் தொடர்ந்து முடக்கப்பட்டு பாடசாலைகளும் மூடப்பட்டன.

இந்தநிலையில், நாட்டையும் பாடசாலைகளையும் மூடவேண்டாம் என உலக உளவியல் நிபுணர்கள் உலக அரச தலைவர்களிடமும் அரசுகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கொரோனாத் தாக்கத்தின் காரணமாக சுமார் இரு வருட காலமாக எமது நாட்டு மாணவர்களின் கல்விச்  செயற்பாடுகள் தடைப்பட்டிருந்தன.

புதுவருட கொரோனாக் கொத்தணி பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலைகள் கட்டம் கட்டமாகத் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் ஆர்வமாக ஈடுப்படுகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு கொரோனா வைரஸ் பரவலைத்  தீவிரப்படுத்த முயற்சிக்கின்றார்கள்.

தேசிய வருமானம் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மிகவும் புத்திசாலித்தனமான முறையில், நாட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

அரச செலவு முகாமைத்துவம், அரச செயற்றிட்ட வினைத்திறன், நிர்மாணிப்புக்களுக்காக மக்களை ஊக்கப்படுத்தல், சமுர்த்தி செயற்றிட்டத்தை அபிவிருத்தி செயற்றிட்டமாக்கல் உள்ளிட்ட பல விடயங்கள் 2022ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. உற்பத்தி பொருளாதாரத்துக்காகப் பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தாக்கத்தால் இறக்குமதி பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பொருள் உற்பத்திகளுக்கும் பெருமளவில் கேள்வி நிலவுகின்றது.

உலக சந்தையில் எரிபொருள், சமையல் எரிவாயு ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது. இந்தப் பிரச்சினை இலங்கைக்கு மாத்திரம் வரையறுத்ததல்ல.

எமது நாட்டில் நீர், எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவை நிவாரண அடிப்படையில் வழங்கப்படுகின்றமை தவறானதாகும்.

பெற்றோலியம், மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் துறை ஆகிய பிரதான துறைகளில் காணப்படும் நட்டம் நாட்டின் அபிவிருத்திக்குப் பிரதான தடையாகக் காணப்படுகின்றது” – என்றார்.

======================

நாட்டை மீண்டும் முடக்குவதே எதிர்க்கட்சியினரின் நோக்கம்! – நாலக்க பண்டார எம்.பி. குற்றச்சாட்டு

நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை ஏற்படுத்தி நாட்டைச் செயலிழக்க செய்வதற்கே எதிர்க்கட்சிக்கு விரும்புகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாலக்க பண்டார கோட்டேகொட தெரிவித்தார்.

மாத்தளை, கோட்டுவ வீதி அபிவிருத்திப் பணியை நேற்று ஆரம்பித்த வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரு இலட்சம் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த வீதியானது 8.29 மில்லியன் ரூபா செலவில் காபட் வீதியாகப் புனரமைக்கப்படவுள்ளது.

தற்போதைய அரசு மக்களின் துயரங்களை நன்கு உணர்ந்துள்ளது. சில பிரச்சினைகளுக்கு மிகக் குறுகிய காலத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் பல வருடங்களாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. தற்போதே சரியான பாதையில் செல்கின்றது.

இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை நிறுத்திவிட்டு நாட்டு மக்களைப் பிரச்சினைக்குள் தள்ள வேண்டும் என்பதே நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் நோக்கமாகும்” – என்றார்.