பாணின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கக்கூடும்- எதிரணி எதிர்வுகூறல்

0
153
Article Top Ad

2022ஆம் ஆண்டு ஜனவரியாகும்போது நாட்டில் ஒரு இறாத்தல் பாணின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி. எதிர்வுகூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எதிர்வுகூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டு மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று நாட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர். அரசின் முறையற்ற நிதி முகாமைத்துவத்தால் உலக நாடுகள் கடன் வழங்க மறுக்கின்றன.

இந்நிலையில், தற்போது எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறுகிய காலப்பகுதிக்குள் இரண்டு தடவைகள் விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பானது எல்லா விடயத்திலும் தாக்கம் செலுத்தும். அரசின் முறையற்ற நிதி முகாமைத்துவத்தால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களுக்குள் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படும்.

டொலர் நெருக்கடியைத் தீர்க்காவிட்டால் – ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும். பாண் ஒன்றின் விலை 100 ரூபாவரை உயரும்” – என்றார்.
………