டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்து வீராட் கோலி திடீர் விலகல்

0
125
Article Top Ad

தென் ஆபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக வீராட் கோலி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சமீப கால சர்ச்சை புள்ளியாக இருப்பவர் விராட் கோலி. டெல்லியைச் சேர்ந்த 33 வயதாகும் விராட் கோலி நிகழ்கால கிரிக்கெட் வீரர்களில் ஆகச்சிறந்த வீரர்களுள் முக்கியமானவராக திகழ்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கடந்த டிசம்பரில் ஒரு நாள் அணி கேப்டனிலிருந்து கோலி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டார். வீராட் கோலி டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக நீடித்தார்.

இந்த நிலையில் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வெள்ளியன்று ,தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் விராட் கோலி இந்த முடிவை எடுத்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து விராட் கோலி ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது

‘7 ஆண்டுகள் கடின உழைப்பு, முயற்சியின் மூலம் இந்திய அணியை சரியான பாதையில் கொண்டு செல்லப்பட்டது.

என்னுடைய பணியை நேர்மையாக செய்திருக்கிறேன். எதுவுமே ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும், என்னை பொறுத்தவரையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. எனது கேரியரில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் என்றுமே அவநம்பிக்கை கொண்டிருக்கவில்லை..

நாட்டுக்காக வழிநடத்தும் பதவியை அளித்ததற்காகவும், நீண்ட காலம் அந்த பணியில் இருக்க வாய்ப்பு அளித்ததற்காகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது அணி வீரர்களுக்கு பெரிய நன்றி. உங்களால் இந்த பயணம் மிகவும் அழகானதாகவும், நினைவுகளோடும் கடந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த ரவி சாஸ்திரி பெரிய நன்றி. இறுதியாக எம்.எஸ்.தோனி அவர்களுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவிக்கிறேன். எனக்குள் இருக்கும் கேப்டனுக்கான தகுதியை கண்டறிந்து, நம்பி எனக்கு உறுதுணையாக இருந்து முன்னேற்றியவர்.’ இவ்வாறு கோலி தெரிவித்துள்ளார்.