‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ புலம்பெயர் தமிழர்களை ஒடுக்கவா?

0
315
Article Top Ad

இலங்கையின் குடியகல்வு குடிவரவுத் திணைக்களங்களின் முன்னால் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் போர் எங்கள் மண்ணை இனக்கொலை செய்த போது எம் மக்கள் வான் வழியிலும் கடல் வழியிலும் அகதிகளாகச் சிதறிப் பறந்தனர். இப்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஒரு போரைப் போல மக்களை விழுங்குகிறது.

இந்த சூழலில் சிங்களவர்களும் இப்போது நாட்டைவிட்டு புலம்பெயரத் துவங்குகிறார்கள். தமிழ் மக்களின் தேசத்தை பெரும் இனவழிப்புப் போரினால் கையகப்படுத்திய போதும் இப்போது சிங்களவர்களும் வாழ முடியாத ஒரு நிலை இந் நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.

எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பது அறிவியல் பூர்வமானது என்பதை இலங்கையின் அண்மைய கால நிகழ்வுகளைப் பார்த்து உணர முடிகிறது.

இந்த சூழலிலும் வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய எதிர்பார்க்கும் இலங்கையர்கள் ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சிலிருந்து ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ தேவை என்ற அறிவிப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுத்திருக்கிறது.

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைய இச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டவர்கள் ஸ்ரீலங்காவில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவே இப்படிச் செய்யப் படுவதாக ஸ்ரீலங்காவின் பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் ஸ்ரீலங்கா அதளபாளத்தை நோக்கி தள்ளப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. பசியினால் மடிய வேண்டிய நிலை ஏற்படுமா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்படியொரு நெருக்கடி நிலையிலும் ஏன் ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ என்ற அறிவிப்பு? சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஈழத்தில் இனவிடுதலைக்காக போராடிய மக்களை மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி ஒடுக்கியது இலங்கை அரசு.

மக்களின் சுதந்திரத்திகாகவும் தனித் தேசத்திற்காகவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மௌனிக்கச் செய்து முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நிகழ்த்தியது ஸ்ரீலங்கா அரசு.

அதற்குப் பிறகு முழுமையான சிங்கள இராணுவ அடக்குமுறை ஆட்சியை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா அரசு, ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைகள் குறித்தோ, தம்மீதான ஒடுக்குமுறைகளைக் குறித்தோ குரல் எழுப்ப முடியாத சர்வாதிகார இன ஒடுக்குமுறை ஆட்சியில் வடக்கு கிழக்கு தமிழர் தேசத்தை அமுங்கவைத்திருக்கிறது.

கைப்புண்ணை மறைக்க கண்ணாடி எதற்கு என்றால் போல மிகத் தெளிவாக வெளித்தெரியும் வகையில் ஈழம் எரியும் பிரச்சினைகளை இன்னும் சுமந்தபடியிருக்கிறது. நிலத்திற்கான போராட்டமும் தொன்மங்களை சிதைப்பதற்கு எதிரான போராட்டமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான போராட்டமும் இனப்படுகொலைக்கான நீதிக்கான போராட்டமும் தமிழ் சனங்களில் நெஞ்சில் தீயாய் எரிகின்றது.

சாத்வீக வெகுசனப் போராட்டங்களை பெருமெடுப்பில் மேற்கொள்ளமுடியாத நிலையில் இராணுவ ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் ஈழ மண்ணை மிரட்டிக் கொண்டிருக்கிறது. தாம் எப்படியான அடக்குமுறையில் வாழ்கிறோம் என்பதைக் கூடசொல்ல முடியாத பேரினவாத அடக்குமுறை நிலவுகிறது.

தாய் நிலம் இப்படியொரு அடக்குமுறைச் சிறையில் இருக்கும் நிலையில் அந் நிலத்திற்காக குரல் கொடுக்கும் உன்னத பணியை புலம்பெயர் தேசம் மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை தேவை என்ற ஈழ மக்களின் குரலை சர்வதேச அரங்கில் அதிர்வுடன் கொண்டு சேர்க்கும் பணியில் புலம்பெயர் உழைக்கிறது.

ஈழத்தில் மக்கள் எத்தகைய அடக்குமுறை சூழலில் வாழ்கிறார்கள் என்றும் உண்மையில் இன்று ஈழ மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுதான் என்ன வென்றும் புலம்பெயர் மக்கள் குரல் கொடுக்கின்றனர்.

ஈழத்தின் ஆத்மாகவும் மனசாட்சியாகவும் குரலாகவும் புலம்பெயர் தேச மக்களின் முகங்களும் குரல்களும் ஒலிக்கின்றன. இந்த நிலையில் புலம்பெயர் தேசத்தின் குரலை முறியடிக்க ஸ்ரீலங்கா அரசு பல்வேறு சூழ்ச்சிகளை கையாண்டு வருகின்றது.

அதற்காக பல்வேறு அரசியல் மற்றும் இராணுவ நடவடிகைகளை மேற்கொண்டும் வருகின்றது. சில ஆண்டுகளின் முன்னர் பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தில் அதிகாரியாக கடமையாற்றும் சிங்கள இராணுவத்தின் பிரிக்கேடியர் பிரியங்க பெர்ணான்டொ ‘தமிழர்களின் கழுத்தறுப்பேன்’ என்று உடல் மொழியில் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் செயற்பட்டமை சர்வதேச அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் நோக்கையும் போக்கையும் குறித்த செயலின் வாயிலாக பிரியங்க பெர்னாண்டோ வெளிப்படுத்தியிருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம், புலம்பெயர் தமிழர்கள் பல நூற்றுக் கணக்கானவர்களுக்கு நாட்டிற்குள் நுழையத் தடைவிதித்திருந்தது.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கையில் ஈழத் தீவின் சொந்த மக்களுக்கே உள்நுழைவதற்கான தடை அரசசட்டமாக விதிக்கப்பட்ட கொடுமை ஸ்ரீலங்காவில் நடந்தது.

புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின் உரிமை மற்றும் அவர்கள் மீதான மீறல்களை சுட்டிக்காட்டி செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீதே இத்தகைய தடையை ஸ்ரீலங்கா அரசு விடுத்திருந்தது.

புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புக்களையும் ஈழப் போராட்டச் செயற்பாட்டாளர்களையும் குழப்பும் வகையில் பல்வேறு அரசியல் இராணுவ நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசு மெற்கொண்டு வருகின்றது.

இதற்காக எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்ற போர்வையில் சிலர் களமிறக்கப்பட்டு தமிழ் தேசத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

அத்துடன் இத்தகைய நபர்களை வைத்து இன அழிப்புக்கான நீதிக்காக போராடுபவர்களை பின்னால் இழுக்கும் சூழ்ச்சிகளையும் புலம்பெயர் தேசம் கண்டுமுறித்து வருகிறது.

ஈழத்தில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வைத்துக்கொண்டு இருந்த போதும் புலம்பெயர் தேசம் உரத்துக் குரல்கொடுப்பது சிங்கள தேசத்திற்குச் சிக்கலாக இருக்கின்றது. இதனால் புலத்தை அடக்க எல்லை கடந்த இராணுவ நடவடிக்கையை அல்லது எல்லை கடந்த இன அழிப்பை மேற்கொள்ள ஸ்ரீலங்கா முனைகின்றது.

அத்துடன் ஈழத்தில் இன விகிதாரத்தை வீழச்சியுறச் செய்வதில் வெற்றி காணப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தேசதமிழ் இளைஞர்கள் யுவதிகள் தாயக உறவுகளை திருமணம் செய்யத் தடுப்பதன் வாயிலாக புலம்பெயர் தேசத்திலும் இனவிகிதாரத்தை வீழ்ச்சியுறச் செய்யலாம் என ஸ்ரீலங்கா திட்டமிடுகிறது.

அதற்காகவே ‘பாதுகாப்பு தடை நீக்கல் சான்றிதழ்’ எனும் ஒப்பிரேஷன் டயஸ்போராவா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சிகண்டுள்ள நிலையில் இன்றைக்கு புலம்பெயர் தேசமக்கள் இலங்கைத் தீவின் பொருளாதாரத்திற்குப் பெரும்பங்கை அளிக்கின்றனர்.

அங்கிருந்து தாயக உறவுகளுக்காக அனுப்பப்படும் நிதி இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு எனலாம். ஈழத் தமிழர்களின் உரிமையை வழங்கி அவர்களின் தனித்தேசப் போராட்டத்தை அங்கீகரித்திருந்தால் இன்றைக்கு ஸ்ரீலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு தமிழீழ தேசம் அள்ளியள்ளி நிதிக்கொடையை வழங்கியிருக்கும்.

ஆனால் ஸ்ரீலங்கா அரசோ ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி ஈழ மண்ணில் நிலைத்திருந்த தமிழீழப் பொருளாதார வளத்தையும் பூச்சியத்திற்குச் செல்லும் அளவுக்கு அழித்திருந்தது.

புலம்பெயர் தேச மக்கள் நாடு திரும்புவதற்கும் தமது இனத்தை விருத்தி செய்வதற்கும் இடையூறாக இந்த அணுகுமுறை அமைவதுடன் ஸ்ரீலங்கா பொருளாதாரத்தில் இன்னும் பின்னடைவுகளை சந்திக்கவும் ஏதுவாக அமையும்.

எவ்வாறெனினும் புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழமக்கள், தம் தாய்நிலத்திற்கு திரும்பவும் பந்தம் கொள்ளவும் முழு உரித்துடையவர்கள். இது அவர்களின் தாய்நிலம். எனவே இலங்கை அரசு போடும் தடைகளை உடைத்து பயணம் செய்ய வேண்டிய தேவை ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களுக்கும் உண்டு. உலகம் முழுவதும் பரந்துவிரிந்து வாழும் புலம்பெயர் மக்கள் ஈழத் தமிழரின் சிறகுகளாகிவிட்டனர். எங்கள் தேச விடுதலை என்கிற சுதந்திர விடியலுக்காக அச்சிறகுகள் இன்னும் விரிந்து அசைந்து பறக்கட்டும்.

தீபச்செல்வன்

நன்றி – ஈழநாடு