இலங்கை மீண்டெழ 18 மாதங்கள் தேவை சர்வதேச ஊடகத்திடம் பிரதமர் ரணில் தெரிவிப்பு

0
123
Article Top Ad

“தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு, நாட்டின் பொருளாதாரம் உறுதித்தன்மைக்கு வருவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகும்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை தற்போது பெரும் டொலர் நெருக்கடி மற்றும் கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், ஆனால் அதிக எண்ணிக்கையிலான தனியார் கடனாளிகள் காரணமாக சிரமங்களை அரசு எதிர்கொள்கின்றது என்றும் அவர் கூறினார்.

இந்திய ஊடக வலையமைப்பான WION சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைய வேண்டும்.

கடன் உதவி தொடர்பில் அரசு தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வருகின்றது.

அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கோரும் அதேவேளையில், தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குத்  தீர்வு காண நன்கொடை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகின்றது.

இலங்கையின் கடன் நிலையான மட்டத்தில் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது. எனவே, பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியால் முன்மொழியப்பட்டவாறு அரசு 2020இல் சர்வதேச நாணய நிதியத்தை அணுகியிருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையால் சுட்டிக்காட்டியபடி, இலங்கை முழுக்க முழுக்க அவசரநிலையை எதிர்கொள்கின்றது. எனவே, உலக வல்லரசுகளின் ஆதரவு தேவை.

ஏற்றுமதி சார்ந்த வணிக மாதிரியை அறிமுகப்படுத்துவதன் மூலம் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இலங்கையைப் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரமாக மாற்ற வேண்டும்” – என்றார்.

தனது இடைக்கால வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “கடனை மீளச் செலுத்துவதற்கும், அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும், நலிவடைந்த மக்களுக்கு நலன்புரி உதவிகளை வழங்குவதற்கும், அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக வரி முறையை சீர்திருத்துவதற்கும் கூடுதல் நிதியை வழங்க வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்படும்” – என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை மீண்டும் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாற வேண்டும் என்பதால் நிதி ஒழுக்கத்தை உறுதி செய்வதில் நான் கவனம் செலுத்துகின்றேன்.

பொருளாதார மறுசீரமைப்புடன், நாட்டை உறுதிப்படுத்தும் அரசியல் சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது.

அரசமைப்பின் 21ஆவது திருத்தம் போன்ற சில அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மிகவும் தேவையான சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றேன். நாடாளுமன்றத்தில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் நாடுகின்றேன்” – என்றார்.

வெளிக் காரணிகள் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“சீனா இலங்கைக்கு கடன் ஏற்பாடுகள் மூலம் உதவி செய்து வருகின்றது. ஆனால், இந்தியா பல முனைகளில் அரசுக்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றது.

இலங்கை இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது. இந்திய அரச அதிகாரிகள் பலருடன் நான் பேச்சு நடத்தி வருகின்றேன்.

இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதும் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதும் காலத்தின் தேவையாகும்.

கூடிய விரைவில் நாட்டை உறுதியான நிலைக்குக் கொண்டு வருவதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கின்றேன். எனவே, அரசியல் களத்தில் இரு தரப்பிலிருந்தும் எனக்கு ஆதரவு தேவை” – என்றார்.