உணவுப் பஞ்சத்தின் தாக்கம் சில நாட்களில் மோசமடையும் என்கிறார் சத்தியலிங்கம்!

0
86
Article Top Ad

உணவுப் பஞ்சத்தின் விளைவை இன்னும் சில காலத்தில் சுகாதார குறிகாட்டிகளில் அவதானிக்கலாம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா, பூந்தோட்டத்தில் சேதன நகர வீட்டுத்தோட்டத்தில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“இந்த நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என பாதீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கதைக்கும் அரசியல்வாதிகளும் மற்றும் நிபுணர்களும் கூறுகின்றனர்.

ஆனால், ஏற்கனவே இந்த நாட்டில் உணவுப் பஞ்சம் வந்துவிட்டது. இதன் தாக்கம் இன்னும் சில நாட்களில் மோசமாக தெரியக்கூடிய வாய்ப்புள்ளது.

நிறை குறைந்த பிள்ளைகள் பிறக்கின்றார்கள். பாடசாலை மாணவர்கள் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுகின்றனர்.

உணவுப் பணவீக்கம் 90 வீதமாக உள்ளது. உலகத்திலேயே உணவுப் பணவீக்கம் கூடிய நாடுகளிலும் 6 ஆவது இடத்தில் இலங்கை உள்ளது.

இதற்கான காரணத்தை நாம் பார்க்க வேண்டும். அரசியல் ரீதியான கொள்கை வகுப்பாளர்கள் நிதானமான கொள்கை வகுப்பை மேற்கொள்ள வேண்டும்.

வவுனியாவில் விலங்குகளை மேய்ச்சலுக்கு விட மேய்ச்சல் தரை இல்லை. கடந்த 20 வருடங்களாக மாவட்ட செயலகக் கூட்டங்களில் மேய்ச்சல் தரை தொடர்பில் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அரசு நாட்டில் விவசாயம் தொடர்பான கொள்கை வகுப்பை மேற்கொள்ளும் போது அரசியலுக்காக இல்லாமல் மாவட்டங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்க வேண்டும்.

இன்னும் சில காலத்தில் உணவுப் பஞ்சத்தின் விளைவை சுகாதார குறிகாட்டிகளில் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்” – என்றார்.