104 ரோஹிங்கிய அகதிகளும் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைப்பு!

0
57
Article Top Ad

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கிய அகதிகள் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழ். சிறையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் மூன்று பஸ்கள் மூலம் இன்று காலை 6 மணியளவில் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லிம்கள் பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேஷியாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்டவிரோதமாகப் பயணித்தபோதே வடக்குக் கடற்பரபில் படகு பழுதடைந்து தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் கடந்த 17 ஆம் திகதி இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு மறுநாள் 18 ஆம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

சட்டத்துக்குப் புறம்பாக இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 ரோஹிங்கிய அகதிகள் மற்றும் அவர்களைச் சட்டத்துக்குப் புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவிய படகோட்டி ஆகியோருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் காங்கேசன்துறைப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்நிலையில், கடந்த 19ஆம் திகதி 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன், அகதிகள் 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்த படகோட்டியை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

அதையடுத்து கடந்த 19 ஆம் திகதி இரவு 8 மணியளவில் 105 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், 105 பேரில் விளக்கமறியல் கைதியான படகோட்டியைத் தவிர ஏனைய 104 பேரும் மிரிஹான தடுப்பு முகாமுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.