ஜனாதிபதி தேர்தல் : சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

0
73
Article Top Ad

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணிக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் குமார் வெல்கம ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கூட்டணி தொடர்பில் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் டிரான் அலஸ் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதுடன், கூட்டமைப்பின் எதிர்கால விவகாரங்கள் குறித்து ஆராயும் விசேட சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசியல் கூட்டணியின் பிரசாரம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச அமைப்பாளர்கள் அழைக்கப்பட்டு மாவட்ட மட்டக் கூட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் கம்பஹா மாவட்டத்தை இலக்கு வைத்து முதலாவது கூட்டம் நடத்தப்பட்டதுடன், அந்த மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமைப்பாளர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்படி அடுத்த சில மாதங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூட்டணியின் தலைவர்கள் அனைத்து மாவட்டங்களின் அமைப்பாளர்களையும் சந்தித்து உரிய வேலைத்திட்டம் தொடர்பில் தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா மற்றும் மொட்டுக் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்களுக்கும் இடையே முரண்பாடு உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியில் இருந்து விலகியவர்களை இணைத்து புதிய அரசியல் கூட்டணியை அமைக்க நிமல் லன்சா திட்டமிட்டுள்ளமையே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதியின் விசேட செயற்றிட்டங்களுக்கு நிமல் லன்சா பொறுப்பேற்றுள்ளதுடன், அவருக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து அலுவலகம் மற்றும் பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் சரியாக 365 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்.

சாதாரணமாக ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தப்பட்ட அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இருந்து கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வரை இந்த நிலைமையை காணக்கூடியதாக இருந்தது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே நாட்டின் அனைத்து துறைகளும் அது சம்பந்தமாக கூடுதல் கவனத்தை செலுத்துவதை காணமுடியும்.

இதற்கு அமைய இன்னும் 182 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நிறுத்தப்படலாம பேச பேசப்படுகிறது.

எனினும் பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரை நிறுத்தப்பட போகும் வேட்பாளர் தொடர்பிலான கருத்துக்களை வெளியிட போவதில்லை என தீர்மானித்துள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், ஏனைய அரசியல் கட்சிகளுடன் அந்த கட்சி உத்தியோபூர்வமற்ற வகையிலான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி அதன் தலைவரான சஜித் பிரேமதாசவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளது.

மேலும் தேசிய மக்கள் சக்தியும் அதன் தலைவரான அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவுள்ளது.

இவர்களை தவிர சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைவரான டளஸ் அழகப்பெருமவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என அந்த கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் அரசியல் கட்சிகளுடன் சம்பந்தப்படாத சிலரையும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த சில தரப்பினர் முயற்சிகளை மேறகொண்டுள்ளதாக அரசியல் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

எது எப்படி இருந்த போதிலும் அடுத்த 12 மாதங்களுக்குள் நாட்டில் ஏற்படும் அரசியல், பொருளாதார சூழ்நிலைகளே அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.