காஷ்மீர் கறுப்பு தினத்தை நினைவுகூர்ந்து ஐ.நா. காரியாலயத்திற்கு முன் போராட்டம்

0
42
Article Top Ad

காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இந்த கறுப்பு தினத்தை முன்னிட்டு காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பினர் கொழும்பு மாநகர சபை, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பிலான மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஸம்மில் ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயம் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய முன்றல்களில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

“காஷ்மீர் விடயத்தில் ஜக்கிய நாடுகள் சபையும், ஜ.நா. மனித உரிமை அமைப்பும் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து வைக்கவேண்டும்.சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான போராட்டத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்.

காஷ்மீர் மக்களின் நிரந்தர துயரங்களை நோக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் அடிப்படையில் தீர்வு காண்பதை வலியுறுத்துவதாகவும் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.”

மேலும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“காஷ்மீர் விடயத்தில் இந்தியா முற்போக்கான சிந்தனையுடன் செயற்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கு ஜனநாயகத்தை கற்றுக் கொடுப்பது போன்று எண்ணி வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்தியா, தனது மக்கள் 40 வருடங்களாக காஷ்மீரில் படும் இன்னல்களுக்கு ஜனநாயத்தை அமுல்படுத்த தயங்குவது ஏன்?

மனிதாபிமானமில்லாத அடக்குமுறையை உலகில் சந்திக்கும் இடங்களான காஸ்மீரின் விடுதலைக்கும், பலஸ்தீன விடுதலைக்கும் நாங்கள் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றோம். இனவாதத்தை விதைத்தோரே உலக பூகோள அரசியலில் இனவாத கோரமுகங்களின் பாதிப்புக்களை சந்தித்து வருவதை நாம் காணலாம்” என தெரிவித்தார்.