இஸ்ரேல் – ஹமாஸ் போர் ; காசாவிலிருந்து 3.38 லட்சம் பேர் வெளியேற்றம்

0
39
Article Top Ad

இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில் காசா நகரில் இருந்து இதுவரை 3.38 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான போர் 6வது நாளை எட்டியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இது தொடர்பாக, ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில் காசா நகரில் இருந்து இதுவரை 3.38 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது காசாவின்
மொத்த மக்கள் தொகையில் 11 சதவீதம் ஆகும்.

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசா பகுதியில் பொதுச் சேவைகள் நிறுத்தப்பட்டு, முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. போர் காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவிக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் அவசர மத்திய அரசு அமைக்க ஒப்பந்தம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸும் தற்போதைய போர் மோதல்களைக் கருத்தில் கொண்டு மத்திய அவசர அரசாங்கத்தை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் அடங்கிய போர் அமைச்சரவையை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் காரணமாக இருதரப்பிலும் இதுவரை 2,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் Vs பாலஸ்தீனம் & ஹமாஸ்: ஏன் இந்த வரலாற்றுப் பகை?

செப்டம்பர் 9, 1993 அன்று, பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவரான யாசர் அராஃபத், அப்போதைய இஸ்ரேல் பிரதமர் யிட்சாக் ராபினுக்கு கையெழுத்திடப்பட்ட கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அந்தக் கடித்ததில் , “வன்முறையை ஏற்படுத்தும் அனைத்து செயல்களிலிருந்தும் விடுப்பட்டு, அமைதியான சுகமான வாழ்வைத் தொடங்குவதற்கான வரலாற்று நிகழ்வு இது” என்று யாசர் அராஃபத் குறிப்பிடுகிறார்.

இந்த ஒப்பத்ததுக்குப் பிறகு பயங்கரவாத பட்டியலில் இருந்து பாலஸ்தீன விடுதலை அமைப்பை யிட்சாக் ராபின் நீக்குகிறார். பயங்கரவாத முகமாக அடையாளப்படுத்தப்பட்ட யாசர் அராஃபத், பாலஸ்தீனத்தின் முகமாக மாறுகிறார். இதன் தொடர்சியாக பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒஸ்லோ ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தலைமையில் வெள்ளை மாளிகையில் கையெழுத்தாகிறது. “இனி காலங்கள் மகிழ்ச்சியாகும்” என்று யாசர் அராஃபத்தும் – யிட்சிங் ராபின் கைக்குலுக்கி மகிழ்ந்தனர்.

ஒஸ்லோ ஒப்பந்தம் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே சமாதானத்தை முன்னெடுப்பதையும், மேற்குக் கரையின் பெரும்பகுதியை பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை நோக்கமாகவும் கொண்டிருந்தது. ஆனால், இரு தரப்புக்கு இடையேயான அமைதி, சில ஆண்டு காலம்தான் நீடித்தது. வன்முறையில் கோர முகத்தை இரு நாடுகளும் சந்திக்கத் தொடங்கின.

இஸ்ரேலைச் சேர்ந்த தீவிர வலதுசாரியால் யிட்சாக் ராபின் கொல்லப்படுகிறார். மறுபக்கம் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழு அமைப்புகள் தாக்குதல்களை தொடர்ந்தன. நிகழ்ந்த வன்முறையை யாசர் அராஃபத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. விளைவு, ஒஸ்லோ ஒப்பந்தம் உடைகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே முன்னெப்போதும் இல்லாத மோதல் வெடிக்கத் தொடங்கியது.


வரலாற்றுப் பகை: காசா பகுதியில் இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையேயான ரத்தப் போர் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல் உலகப் போருக்குப் பின், பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் பாலஸ்தீனம் வந்தது. இதில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்க, ஹிட்லரின் சர்வாதிக்கார ஆட்சியிலிருந்து தப்பி புலம்பெயர்ந்தவர்களாக வந்த யூதர்கள் சிறுபான்மையினராக வசித்து வந்தனர்.

நாளடைவில் பாலஸ்தீனத்திலிருந்த யூதர்களுக்கு தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்று பிரிட்டனிடம் யூதக் குழுக்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு அங்கிருந்த பாலஸ்தீனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், இரண்டாவது உலகப் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1948-ம் ஆண்டு ஐ.நா-வின் ஒப்புதலோடு யூத , அரபுப் பகுதி என பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டது. ஜெருசலேம் சர்வதேச நகரமானது. காலப்போக்கில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதலில் பிரிட்டன் தலையிடுவதை நிறுத்திக் கொண்டது.

1967-இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றது. ஆறு நாள் நடந்த இப்போரில் கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. இதில் ஒருங்கிணைந்த ஜெருசலேமை தங்கள் தலைநகரமாக இருக்கும் என்று இஸ்ரேல் அறிவித்தது. இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அரபு நாடுகள் உட்பட பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், ’இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே 2017-ஆம் ஆண்டு ’கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் கூடிய பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால், ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுடன் தொடர்ந்து இருக்கும்’ என்று அறிவித்தார். ட்ரம்பின் முடிவை நிராகரிப்பதாக பாலஸ்தீனம் அறிவித்தது. எனினும், எதிர்ப்பை மீறி, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்தார். இவ்விவகாரத்தில் துருக்கியும், ஈரானும் பாலஸ்தீனத்துக்கு துணையாய் இருந்தன. பிற அரபு நாடுகள் பலவும் பாலஸ்தீனத்தை கைவிட்டுவிட்டன என்பதே வரலாறு நமக்கு கூறும் செய்தி.

மவுனம் காத்த வல்லரசுகள்: 2022-ல் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூண்டபோது, கிழக்கு ஜெருசலேமில் டமாஸ்கட் கேட் பகுதியில் கூடியிருந்த பாலஸ்தீனர்களை நோக்கி இஸ்ரேல் ராணுவம் கொடூரமானத் தாக்குதலை அரங்கேற்றியது. பல ஆண்டுகளாக அல் அக்ஸா மசூதி, காசா பகுதியில் நாள்தோரும் பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஜெனின் பகுதியில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தபோது பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே, இஸ்ரேல் ராணுவத்தால் தலையில் சூடப்பட்டு கொல்லப்பட்டார். அப்போதெல்லாம் வல்லரசுகள் அமைதிக் காத்தன. ஆனால், இப்போது கண்டனக் குரல்கள் வரிசையாக வல்லரசுகளிடமிருந்து வந்துக் கொண்டிருக்கிறது. காரணம், இம்முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது அவர்களது நட்பு நாடான இஸ்ரேல்.

.ஹமாஸுக்கு கொம்பு சீவும் ஈரான்: பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனைப் பகுதி உள்ளது. இந்தப் பகுதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழு அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.. ஹமாஸிடமிருந்து காசாவை கைப்பற்ற இஸ்ரேலும் பதில் தாக்குதலை நடத்தும்.

இந்தச் சூழலில்தான் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி, ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி ஹமாஸ் அமைப்பு தற்போது நடக்கும் போரை தொடங்கி வைத்திருக்கிறது. இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது இரு நாடுகளைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள்தான். இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸுக்கு ஆதரவாக முழு வீச்சில் ஈரான் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நிதி மற்றும் ஆயுதப் பயிற்சி அளித்து ஹமாஸுக்கு கொம்பு சீவிக் கொண்டிருப்பது ஈரான் தான் என்றும் சொல்லப்படுகிறது. ஹமாஸுக்கு ஆயுதம், தொழில் நுட்பப் பயிற்சியை சீனா வழங்கி கொண்டிருக்க, ரஷ்யாவும் இந்த ஆதரவுக் கூட்டணியில் உள்ளது. சிரியாவும், லெபனானும் இக்கூட்டணியுல் சமீபத்தில் இணைந்துள்ளன.

வரலாற்றில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நடந்த சிறப்புமிக்க ஒப்பந்தமாக ஒஸ்லோ ஒப்பந்தம் இன்று வரை குறிப்பிடப்படுகிறது. ஒஸ்லோ ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தாலும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுவதற்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

தற்போது இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடங்கியுள்ள போரை தணிப்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும் யாசர் அராஃபத் – யிட்சாக் ராபின் போன்ற தலைவர்கள் இல்லை. பகை மட்டுமே மிச்சமிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள். 21-ம் நூற்றாண்டின் மற்றுமொரு பிழை தொடங்கி இருக்கிறது.