பொலிஸ்மா அதிபரின் சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவு; புதிய பொலிஸ்மா அதிபர் யார்?

0
58
Article Top Ad

பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்றாவது சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

ஆனால், பொலிஸ்மா அதிபர் பதவிக்கு எவருடைய பெயரும் அரசியலமைப்பு பேரவைக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை.

பொதுவாக, மூன்று பெயர்கள் அரசியலமைப்புப் பேரவைக்கு முன்மொழியப்பட வேண்டும். ஆனால், இதுவரை எவரது பெயரும் முன்மொழியப்படவில்லை.

பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்ரமரத்னவுக்கு மூன்றாவது முறை ஜனாதிபதியால் சேவை நீடிப்பு வழங்கப்பட்ட போது அரசியலமைப்பு பேரவையின் அனுமதி பெறப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தன.

அவருக்கு வழங்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாவது சேவை நீட்டிப்புகள் தலா மூன்று மாதங்களாகவும் கடைசி சேவை நீட்டிப்பு மூன்று வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், இன்று பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படாவிட்டால், நாளை இரண்டாவது தடவையாக பொலிஸ்மா அதிபர் ஒருவர் இல்லாத சூழ்நிலை நாட்டில் ஏற்படும்.

புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை கடந்த சில நாட்களாக அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. ஆனால், இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.

பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மூன்று மூத்த டிஐஜிக்களுக்கு (Deputy Inspector General Of Police) இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களான தேசபந்து தென்னகோன், லலித் பதிநாயக்க மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரில் ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தேசபந்து தென்னகோன் புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவதற்கான அதிகமாக உள்ளதாகவும் அறிய முடிகிறது

C. D. Vikramarathna