சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் : பாஜக – பாமக இடையிலான ஒப்பந்தம்

0
14
Article Top Ad

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக பா.ம.க. அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

மக்களவைக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழகத்தில் பாமக, தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா இல்லை பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதில், பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதை உறுதி செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றி பெறுவோம்- அன்புமணி விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் பாஜகவுடன் கூட்டணி முடிவை எடுத்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மார்ச் 19) பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக – பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பாமகவுக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

“10 ஆண்டுகாலமாக பாட்டாளி மக்கள் கட்சி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற மக்களவை தேர்தலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க கட்சி முடிவு செய்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பான சூழல் இருக்கிறது. ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

எங்கள் கூட்டணி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க மிகப்பெரிய வெற்றி பெறும். மோடி 3 வது முறையாக இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார். தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்பட இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் சூடு பிடிக்கும் தேர்தல்களம்- மோடியின் கூட்டத்தில் பங்கேற்கும் ராமதாஸ்

பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டம் சேலத்தில் இன்று இடம்பெறவுள்ளது. இதில் புதிதாக கூட்டணியில் இணைந்த அன்புமணி ராமதாஸ் பங்கேற்கிறார். தேர்தல் கூட்டணி தொடர்பில் நேற்றைய தினம் அறிவித்திருந்த நிலையில் இன்று மோடியுடன் கூட்டத்தில் பங்கேற்கிறார் அன்புமணி. இதனையடுத்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.