ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கிய விரைவான மாற்றத்தையே எதிர்பார்க்கிறோம்

0
13
Article Top Ad

இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் தொடர்பிலான புதிய சட்டமூலமும் அதனுடன் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை இன்று (20) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கை கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகளை ஜூன், ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னர் இதுவரையில் எமக்கு கிடைக்காமலிருக்கும் வௌிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அது மட்டுமன்றி, இலங்கையுடன் வர்த்தகம் செய்வதிலிருந்து விலகியிருந்த வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீண்டும் கொடுக்கல் வாங்கல் செய்ய ஆரம்பிக்கும் என்றும் அதனால் நாட்டில் வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் என்றும், அதனூடாக மக்களுக்கு மேலும் பல சலுகைகளை வழங்க முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடி விரைவில் அந்த பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தற்போதும் ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபாவரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பொருட்களின் விலை குறைவடையும். அடுத்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கிறோம்.