இலங்கையுடன் தரைவழி இணைப்பு – சந்தோஷ் ஜா முக்கிய அறிவிப்பு

0
13
Article Top Ad

இந்திய அரசாங்கம் இரு பிராந்தியங்களுக்கிடையில் நில வழித்தடத்தை அமைப்பதற்கான “முதல் நடவடிக்கைகளை” எவ்வாறு முன்னெடுத்துள்ளது என்பதை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விவரித்துள்ளார்.

இலங்கை – இந்திய சங்கத்தின் வருடாந்த இரவு விருந்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

புதுடில்லி அண்மைய காலமாக முன்னெடுத்துள்ள அரசியல் நகர்வுகளை சுட்டிக்காட்டி, பிராந்தியங்களுக்கிடையிலான இணைப்பைப் பற்றி இந்திய உயர்ஸ்தானிகர் இதன் போது பேசியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை பற்றி பேசிய அவர், காற்று, கடல், வர்த்தகம், டிஜிட்டல், ஆற்றல் மற்றும் மக்களுக்கு இடையிலான இணைப்பு குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையேயான விமான சேவைகள் மற்றும் இந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் பேசியிருந்தார்.

எவ்வாறாயினும், இந்தியா-இலங்கை நில இணைப்பு வழித்தடமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனை சாத்தியப்படுத்துவதற்கான முதல் படிகளை எடுத்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுபடுத்த முடியும் எனவும், மக்களின் வளர்ச்சி மற்றும் செழுமையின் புதிய சகாப்தமாக மாறும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து தமிழ் ஈழத்தின் தலைமன்னாரை இணைக்கும் 23 கிலோமீட்டர் நீளமான பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

இந்தப் பின்னணியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு இரண்டு தசாப்தங்களாக விவாதத்திற்கு உட்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதன் மூலம் தமது நாட்டின் “இறையாண்மை அழிக்கப்படும்” என்று சிங்கள தேசியவாதிகள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது..