அனுரவுடன் விவாதத்துக்கு தயார்: சஜித் அறிவிப்பு

0
12
Article Top Ad

இலங்கை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்திற்கு தயாராக உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவுடன் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சஜித் பிரேமதாசவுக்கு அக்கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே சஜித் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,

பொருளாதாரம், சமூகம், அரசியல் மற்றும் சர்வதேசம் உள்ளிட்ட எந்தவொரு தலைப்பிலும் விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் சவால் விடுத்திருந்த நிலையில், சுனில் ஹந்துநெத்தி விவாதத்திற்கான அழைப்பை விடுத்தார்.

தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர்கள் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து பகிரங்கமாக விவாதிப்பதன் ஊடாக மக்கள், கட்சிகளின் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் அறிந்துக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டிய சுனில், சஜித் பிரேமதாசவுடன் விவாதத்திற்கு அனுரகுமார திஸாநாயக்க தயார் எனவும் தெரிவித்திருந்தார்.

விவாதத்திற்கான அழைப்பினை சஜித் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அதனை எழுத்து மூலம் அறிவிக்குமாறும் சுனில் ஹந்துநெத்தி கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.