முருகன் உள்ளிட்ட மூவரும் விசாரணைகள் நிறைவடைந்து வெளியேறினர்

0
14
Article Top Ad

கொழும்பை வந்தடைந்த முருகன், ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் ஆகிய மூவரும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணிநேரம் விசாரணைகளின் பின்னர், அதிகாரிகள் அவர்களை விடுதலை செய்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூவரும் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இன்று காலை திருச்சிசிறப்பு முகாமில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குறித்த மூவரும், யூ.எல் 122 விமானம் ஊடாக இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை, குறித்த மூவரும் தற்காலிக விசாவில் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அத்துடன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழ் நாட்டு நீதிமன்றில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தியும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்

இன்று காலை 11.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த மூவர் மீதும் ஏற்கனவே விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார்.

இந்நிலையிலேயே விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த மூவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.