பலஸ்தீனியர்களுக்கான உதவிகளை நிறுத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

0
17
Article Top Ad

காசாவில் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் பணியாற்றும் தன்னார்வ தொண்டாளர்கள் 180 பேர் உட்பட மனிதாபிமானமற்ற முறையில் 200 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மனித உரிமைகள் ஆணையாளரின் செய்தித் தொடர்பாளர் ஜெரமி லோரன்ஸை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

கடந்தவாரம் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் உலக மத்திய சமையலறை தொண்டுநிறுவன பணியாளர்கள் 7 பேர் உயிரிழந்ததையடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜெரமி,

“இவ்வாறானதொரு தாக்குதலை மேற்கொண்டு சிவில் ஒழுங்கை சீர்குலைப்பதில் இஸ்ரேல் நேரடியாக பங்களித்துள்ளது.

மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன்காரணமாக World Central Kitchen மற்றும் Anera உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கான உதவிகளை நிறுத்திவிட்டன. இதனால் மேலும் உணவு நெருக்கடி மற்றும் அதிக உயிரிழப்புகள் பதிவாக கூடும்” என தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான உதவியில் ஈடுபட்டுள்ளவர்கள் அல்லது பொருட்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது “போர்க்குற்றம்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து மோதல் காரணமாக 33,000க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 75,000 அல்லது அதற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

போர் நிறுத்தத்திற்கான பலதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும் இந்த மோதல் தொடர் கதையாகவே செல்கின்றது.

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானமற்ற அனைத்து சட்ட மீறல்கள் தொடர்பிலும் சுதந்திரமான, முழுமையான விசாரணைகள் உடனடியாக நடாத்தப்பட வேண்டும் எனவும் குறித்த செய்தி தொடர்பாளர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.