செம்மணி மனித புதைகுழி விவகாரம் மற்றும் 2019 ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுக்கு உடனடி மற்றும் விசேட சர்வதேச விசாரணைகள் நடக்க வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த இலங்கை அரசியலமைப்பின் கீழ் சர்வதேச விசாரணை நடத்த இடமில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பினை வெளியிட்ட சாணக்கியன், இலங்கை சட்டப்படி சர்வதேச பங்கேற்பை உட்புகுத்தும் வழிகள் இருக்கின்றன.
OMP (காணாமல் போனோர் அலுவலகம்) சட்டம் அதற்கே உருவாக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் இது அரசியலமைப்பிற்கு முரணல்ல எனத் தீர்ப்பளித்துள்ளது என சுட்டிக்காட்டினார்.
இந்த சட்டங்களை முன்னாள் நீதிமன்ற அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவே கொண்டுவந்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
யாழ். செம்மணி சித்துபாத்தி மயானத்தில் மனித என்புத்தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை 50இற்கும் அதிகமான என்புத்தொகுதிகள் அகழப்பட்டுள்ளதோடு, இது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் என்புத்தொகுதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுபற்றி உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட சமூகத்தினரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கோரியுள்ளனர்.

