செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (14) செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணையின் முக்கிய அம்சங்கள்
பேராசிரியரின் அறிக்கையின்படி, ஸ்கேனர் பயன்படுத்தப்பட்ட போதிலும், மேலதிகமாக எட்டு வாரங்களுக்கு அகழ்வுப் பணிகள் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளப்படுத்துவது மிக முக்கியமானது எனச் சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டினார். மன்னார், மாத்தளை போன்ற இடங்களில் சான்றுப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதை அவர் உதாரணமாகக் கூறினார். 1999ஆம் ஆண்டு செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 15 எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் முதலில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கும், பின்னர் லாஸ்கோ பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பப்பட்டு, இப்போது லங்க சேய பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார். அதே போன்ற முயற்சி, இதற்கும் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
பழைய வழக்குடன் தொடர்பு
1999இல் சோமரட்ன ராஜபக்ச என்ற கைதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், செம்மணியில் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது, அவரது கூற்று சரியானதாக நிரூபணமாகிறது என சுமந்திரன் குறிப்பிட்டார். இந்த விடயம், B2899 என்ற யாழ். நீதவான் நீதிமன்ற வழக்கேட்டுடன் தொடர்புடையது என்பதால், அந்த வழக்கை மீண்டும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
காணாமலாக்கப்பட்டோர் குறித்த அறிக்கை
1999ஆம் ஆண்டில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக கலாநிதி தேவநேசன் நேசையாவின் தலைமையிலான குழு 2003இல் சமர்ப்பித்த அறிக்கையின் பிரதியொன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், 200க்கும் மேற்பட்ட காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்குப் படைத்தரப்பினரே பொறுப்பு எனத் திட்டவட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பொறுப்பானவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டது.
சாட்சிகள் அச்சுறுத்தப்படுகின்றனரா?
வாக்குமூலம் வழங்க முன்வருபவர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அச்சுறுத்துவதாகக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, வாக்குமூலங்களை அனைவரும் காணக்கூடிய வகையில் அந்தப் புதைகுழிப் பகுதியிலேயே பதிவு செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கண்டெடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவது தொடர்பாக ஆராயுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் DNA பரிசோதனைக்கான ஆய்வகம் நிறுவப்பட்டு வருவதாகவும், விரைவிலேயே பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி அகழ்வுப் பிரதேசம் துப்புறவு செய்யப்பட்டு, 22ஆம் திகதி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக சுமந்திரன் கூறியுள்ளார்.

