இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு நீர்வள அபிவிருத்தித் திட்டமான மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை அனுமதித்துள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய இலக்கம், மகாவலி ஆற்றின் மேலதிக நீரை வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடுவதன் மூலம் அப்பகுதிகளில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதாகும்.
மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம், விவசாயத் துறையின் தாங்குதிறனை உயர்த்துவதற்கும், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் உதவும். இதன் மூலம் வடமத்திய மாகாணத்தில் உள்ள 35,600 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் நேரடியாக பயனடைவார்கள் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கான இணை நிதியளிப்பு முயற்சிக்கு ADB தலைமை தாங்குகிறது. இதன்படி, ADB வழங்கும் நிதிக்கு மேலதிகமாக, சர்வதேச அபிவிருத்திக்கான OPEC நிதியத்திலிருந்து 60 மில்லியன் டொலரும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியமான IFAD இலிருந்து 42 மில்லியன் டொலரும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

