இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,003 டொலர் ஆகும்.
2024ம் ஆண்டில் 4,546 டொலராக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஓராண்டில் 457 டொலர் அதிகரித்துள்ளது.
இதற்கு முந்தைய அதிகபட்ச தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. அப்போது 4,372 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
2022ம் ஆண்டு இலங்கை அதிகாரப்பூர்வமாகப் பொருளாதார ரீதியாகத் திவாலான நாடாக அறிவிக்கப்பட்டபோது, அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,464 டொலராக பதிவாகியிருந்தது.
தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் மொத்தப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை, அந்நாட்டின் மக்கள்தொகையால் வகுக்கக் கிடைப்பதாகும்.
இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் உற்பத்தித் திறனை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அளவீடு ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

