பிரித்தானியாவில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தொழில் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு குறைவாக உள்ளதாக புதிய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆளுங்கட்சிக்கு இந்தத் தேர்தலில் பாதிப்புகள் ஏற்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சில கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய கருத்துக் கணிப்புகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
YouGov, Savanta, Survation உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தியுள்ள அண்மைய கருத்துக் கணிப்புகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன் பிரகாரம் தொழில் கட்சி இந்த தேர்தலில் கணிசமான இடங்களை இழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களிடையே ஆளுங்கட்சிக்கு ஆதரவு குறைந்து வருவதாகவும், Reform UK கட்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் Reform UK கட்சி மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு கிடைக்கும் பலனாக தேர்தல் பெறுபேறுகள் இருக்கும் என்றும் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ள நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
வாழ்க்கைச் செலவு உயர்வு, பொருளாதார சவால்கள் மற்றும் குடியேற்றக் கொள்கைகள் போன்ற விடயங்கள், வாக்காளர்களின் மனநிலையை மாற்றிய முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.
இந்த தேர்தல் முடிவுகள், எதிர்காலத்தில் தேசிய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

